பிரித்தானிய வரி விவகார சட்டத்தரணி மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு: லண்டனில் விசாரணை!
பிரித்தானியாவின் முன்னணி வரி விவகார சட்டத்தரணிகளில் ஒருவரான ரொபர்ட் வெனபிள்ஸ், தனது சட்டப் பணிகள் மூலம் ஈட்டிய வருமானத்திற்குச் செலுத்த வேண்டிய 2 மில்லியன் பவுண்டுகள் வரியைச் செலுத்தாமல் ஏமாற்றியதாகத் தொடரப்பட்ட குற்றவியல் வழக்கின் விசாரணை தொடங்கியது.
இந்த விசாரணை நேற்று(20.05.2026) லண்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வரி வருவாய் துறை
78 வயதான ரொபர்ட் வெனபிள்ஸ், கடந்த 2014-15 முதல் 2020-21 வரையிலான ஏழு நிதியாண்டுகளில் தனது உண்மையான வருமானத்தை வேண்டுமென்றே குறைத்துக் காட்டி, பிரித்தானியாவின் வரி வருவாய் துறையான HMRC-ஐ ஏமாற்றியதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
'ஆர்விகியூசி பார்ட்னர்ஷிப்' என்ற கூட்டாண்மை நிறுவனம் மற்றும் 'சிட்டாடல் லிமிடெட்' என்ற நிறுவனம் ஆகியவற்றின் மூலம் தனக்குக் கிடைத்த வருமானத்தை மறைத்ததாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் வெனபிள்ஸ் மறுத்துள்ளார்.

லண்டனின் சௌத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது, அரசுத் தரப்பு சட்டத்தரணி ஜூலியன் கிறிஸ்டோபர் நடுவர் மன்றத்திடம் பேசுகையில்,
"வெனபிள்ஸ் செலுத்த வேண்டிய வரியை விடக் குறைவாகவே செலுத்தியுள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அது தெரியாமல் நடந்த நேர்மையான தவறா அல்லது வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஏமாற்று வேலையா என்பதைத்தான் நீங்கள் தீர்மானிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு விசாரணை
மேலும், வரி வருவாய் துறைக்கு எதிராகப் போராடும் வரி செலுத்துவோரின் தரப்பிலேயே வெனபிள்ஸ் பல வழக்குகளில் வாதாடிப் புகழ் பெற்றவர் என்றும், தன்னை அவர் எச். எம். ஆர்.சி( HMRC)க்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே கருதி வந்ததாகவும் கிறிஸ்டோபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி வரியைச் சேமிக்கும் வழக்கமான நடவடிக்கை அல்ல. மாறாக, சட்டவிரோதமாக வரியை ஏமாற்றி பெறுவது போன்ற குற்றவியல் செயல் என்றும் அவர் வாதாடியுள்ளார்.
1973-ஆம் ஆண்டு முதல் சட்டத்தரணியாகப் பணியாற்றி வரும் ராபர்ட் வெனபிள்ஸ், அவரது சிறந்த சட்டப் பணிக்காக 1990-ஆம் ஆண்டு 'குவீன்ஸ் கவுன்சில்' (தற்போது கிங்ஸ் கவுன்சில்) என்ற உயரிய அந்தஸ்தைப் பெற்றவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான வழக்கின் விசாரணை சுமார் ஏழு வாரங்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.