இறுதிப்போர் இனவழிப்புக்கான அத்தனை அடையாளங்களைக் கொண்டுள்ளது - ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா
இறுதிப்போர் மக்களை மீட்பதற்கான போர் என்று அரசாங்கம் எத்தனை ஆயிரம் விளக்கங்களைக் கொடுத்தாலும் அது இனவழிப்புக்கான அத்தனை அடையாளங்களைக் கொண்டுள்ளது என்பதைக் கூர்ந்து நோக்கும் போது மிகத் தெளிவாகத் தெரியும் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இராணுவத்தரப்பில் தமிழ்ப் பொதுமக்களின் உயிர்களும் ஆயிரக்கணக்கில் பறிக்கப்பட்டன. இங்கு பொது மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டமை குறித்துப் பதில்சொல்லக் கடப்பாடுடையவர்கள் என்று யாரை அடையாளப்படுத்துவது என்ற விவாதம் இன்னும் நிறைவுபெறவில்லை.
ஆனால் தமிழ் மக்கள் உயிர்கள் பறிக்கப்பட்டமை என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது. இந்தப் போராட்டத்தில் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தும் உரிமை ஒவ்வொரு உறவுக்கும் இருக்கின்றது அதைப் பறிக்க யாருக்கும் உரிமையில்லை.
இது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட விடயம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. எனவே இந்தவிடயத்தில் இன நோக்கில் எறியப்படும் ஒவ்வொரு கல்லும் மிகவும் ஆபத்தானவை.
இந்தத் தவற்றைக் கடந்த வரலாற்று நிகழ்வுகளிலிருந்து உணர்ந்துகொள்ளும் வாய்ப்பும் விளங்கிக் கொள்ளும் சந்தர்ப்பமும் இருக்கின்றது. தமிழர்களின் ஆத்மார்த்தமான மனவுணர்வுகளில் இனத்துவ ரீதியில் கல்லெறிவதை எறிகின்றவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் மிகவும் சிறந்தது.
நட்பான சூழலை இணக்கப்பாட்டுடன் நிறுவ உதவக்கூடியது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிகளை உடைத்து அகற்றுவதாலும், அவற்றைச் சிதைப்பதாலும் தமிழ் மக்களின் மனதில் படிந்துள்ள துன்பத்தின் வடுக்களை இல்லாதொழித்துவிட முடியாது.
இவ்வாறானதொரு நிலையில் தங்கள் உறவுகளைப் பறிகொடுத்த மக்கள் அஞ்சலி செய்ய கண்ணீர் விட்டழுது ஆத்மா சாந்திக்கான, ஈமக்கடன்களில் ஈடுபடவுள்ள உரிமை பண்பாடு நாகரிகம் மறுக்கப்படுவதைக் கடைசி தமிழன் உயிரோடு இந்த மண்ணில் வாழும் வரை அந்த வடு நினைவுகூரப்படும்.
அதை எந்த சக்தியாலும், வல்லமையாலும், அதிகாரத்தாலும் தடுக்க முடியாது. ஏனெனில் அது தமிழனுக்கு இழைக்கப்பட்ட மிகத்தெளிவான அநீதியாகும் என குறிப்பிட்டுள்ளார்.