பொரளை தேவாலய குண்டு வைப்பு சம்பவத்தில் ஆளுங்கட்சிக்கு தொடர்பில்லை: பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் குண்டு வைக்கப்பட்ட சம்பவத்தில் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுக்கு தொடர்பில்லை என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பதவிக் காலத்தில் கொழும்பு, பொரளை கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டிருந்தது.
குண்டு வைப்பு சம்பவம்
அதனையடுத்து குண்டு வைப்பு சம்பவத்தில் தொடர்பிருப்பதாக சந்தேகத்தின் பேரில் தேவாலயத்தின் மூன்று உறுப்பினர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளில் அவர்கள் மூவரும் குற்றமற்றவர்கள் என்று சட்டமா அதிபரின் சிபாரிசின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதனையடுத்து பொரளை தேவாலய குண்டு வைப்பு சம்பவத்துடன் முன்னைய கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்குத் தொடர்பு இருப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இணையத்தள செயற்பாட்டாளர்கள் பரவலாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ஊடக பிரிவு அறிக்கை
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு அறிக்கையொன்றை வௌியிட்டு, சம்பவம் தொடர்பில் மேலதிக விளக்கம் அளித்துள்ளது.
பொரளை தேவாலய குண்டு வைப்பு சம்பவம் தொடர்பில் தேவாலய ஊழியர்கள் குற்றமற்றவர்களாக விடுவிக்கப்பட்ட போதிலும் , சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும், தங்காலை அருகே ரன்ன பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும், பிலியந்தலையை சேர்ந்த வைத்தியர் ஒருவரும் சி.சி.ரி.வி. காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 13ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதனைதவிர்த்து இந்த சம்பவத்துடன் முன்னைய கோட்டாபய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.