மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
தலவாக்கலை- மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அப்புத்தளை ஹல்துமுல்லை தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் சடலமே இன்றையதினம்(9) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை சுமன பாடசாலைக்கு அருகாமையில் குறித்த நபருடைய கைப்பை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இதனை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சடலம் மீட்பு
இதனையடுத்து, பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் இன்று காலை முதல் மேல்கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட நேர தேடுதலின் பின்னர், நீர்த்தேக்கப் பகுதியில் இருந்து குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெற்ற பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணை
இதேவேளை, குறித்த நபர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரேதப் பரிசோதனை மற்றும் பொலிஸ் விசாரணைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.