வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு
வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (07.03) தெரிவித்தனர்.
பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே குறித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் உள்ள அவரது மனைவி ஆசிரியராக பணி புரிவதால் பாடசாலைக்கு சென்ற நிலையில் குறித்த நபர் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
பாடசாலை முடிந்து மனைவி வந்து பிற்பகல் 1.45 மணியளவில் வீட்டில் உள்ள கணவரை அழைத்த போதும் நீண்ட நேரமாக வீட்டு வாயில் திறக்கப்படவில்லை.
பொலிஸாரின் நடவடிக்கை
இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் மதிலால் ஏறி சென்று கதவை திறந்த போது கணவன் அறை ஒன்றில் இறந்த நிலையில் காணப்பட்டதுடன், தலையில் காயமும் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், உறவினர்கள் பிற்பகல் 1.55 மணியளவில் பண்டாரிக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கிய போதும் அவர்கள் மரணத்தை தாம் பார்ப்பதில்லை வவுனியா பொலிசில் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.
அதன்பின் பிற்பகல் 2 மணியளவில் வவுனியா பொலிசாருக்கு நேரில் சென்று தகவல் வழங்கப்பட்டது. நீண்ட நேரமாக சம்பவ இடத்தில் கிராம அலுவலர் உள்ளிட்ட பொது மக்கள் திரண்டிருந்த போதும் பொலிசார் வரவில்லை.
அதன் பின் பிற்பகல் 4 மணியளவில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இயங்கும் அவசர தொலைலைபேசி இலக்கமான 107 தகவல் வழங்கப்பட்டது. அதன் பின் 4.30 மணியளவில் வவுனியா பொலிசார் வருகை தந்ததுடன், பண்டாரிக்குளம் பொலிசார் மாலை 5 மணிக்கு வருகை தந்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு சடலத்தை பார்வையிட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
வீட்டில் உள்ள கட்டிலின் மேல் ஏறி அறை ஒன்றின் சுவருக்கு வர்ணம் பூசிய போது கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



