ஜனாதிபதியிடம் பொதுபல சேனா விசேட கோரிக்கை
இஸ்லாம் என்ற மத பெயரை குறிப்பிட்டுக் கொண்டு செயற்படும் அடிப்படைவாத அமைப்புக்களை தடை செய்தால் மாத்திரமே நாட்டிலிருந்து அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புக்களை தடை செய்வது குறித்து ஜனாதிபதி விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara) தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அடிப்படைவாத செயற்பாடுகள் தலைத்தூக்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணி ஆரம்ப காலத்தில் இருந்து ஒத்துழைப்பு வழங்குகிறது.
இஸ்லாமிய மத பெயரால் செயற்படும் அடிப்படைவாத அமைப்புக்கள் குறித்து நாங்கள் குறிப்பிடும் கருத்துக்களுக்கு மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவையற்ற வகையில் அரசியல் இலாபத்திற்காக கருத்துரைத்துக் கொள்கிறார்.
அரசியல் நோக்கத்திற்காக இஸ்லாமிய மத பெயரால் செயற்படும் அடிப்படைவாத அமைப்புக்களை பாதுகாக்கும் வகையில் செயற்படுவதை தவிர்க்குமாறு மக்கள் விடுதலை முன்னணியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரிடம் வலியுறுத்துகிறோம்.
அடிப்படைவாத கொள்கையினால் ஈர்க்கப்பட்டவர்கள் சமூகத்தில் சாதாரணமாக செயற்படுகிறார்கள். இவர்கள் தொடர்பில் எந்நேரத்திலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஒரு நாடு - ஒரு சட்டம் என்ற கொள்கையை உறுதிப்படுத்துவதற்காகவே மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கினார்கள்.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் அறிக்கையின் உள்ளடக்கங்களை செயற்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம் என கூறியுள்ளார்.