கடந்த பத்து வருடங்களாக ஜெனிவாவிற்கு காவடி எடுத்து கண்ட நன்மைகள் என்ன? - ஆனந்த சங்கரி கேள்வி
கடந்த பத்து வருடங்களாக ஜெனிவாவிற்கு காவடி எடுத்து கண்ட நன்மைகள் என்ன? ஏதாவது ஒரு துரும்பையாவது அசைக்க முடிந்ததா? யுத்தம் முடிந்து பத்து வருடங்களுக்கு மேலாகியும் இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என விவாதித்து, ஒரு முடிவை காண முடியாமல் ஜெனிவா அமைப்பு தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த வருட அமர்வில் ஒரு தீர்க்கமான முடிவை மேற்கொள்ளும் என தமிழ் மக்களுக்கு பொய்யான நம்பிக்கையை ஊட்டி, உணர்ச்சிகரமான வசனங்களைப் பேச தமிழ் தலைமைகள் அரம்பித்துவிட்டனர் என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
கடந்த பத்து வருடங்களாக ஜெனிவாவிற்கு காவடி எடுத்து கண்ட நன்மைகள் என்ன? ஏதாவது ஒரு துரும்பையாவது அசைக்க முடிந்ததா? இறுதி யுத்தத்தை தானே நடத்தி முடித்தேன் என்று, பகிரங்கமாக அறிவித்த முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவுடன் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் 5 வருடங்களாக கூடிக்குலாவிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர், உண்மைத் தன்மையை ஏன் மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை.
அந்த ஐந்து வருடங்களில் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் சரணடைந்த போராளிகளுக்கும், வெள்ளை கொடியுடன் வந்தவர்களுக்கும் என்ன நடந்தது என்று, சரத்பென்சேகாவை கேட்டிருந்தால் தெள்ளத்தெளிவாக விபரங்களை கூறியிருப்பார்.
அந்த காலகட்டத்தில் நடந்த ஜெனிவா அமர்வில் எடுத்துக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையையும் எடுத்திருக்கலாம். இதனை ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யவில்லை. பிரதான எதிர் கட்சியாக இருந்தும், நல்லிணக்க ஆட்சி கொண்டு வந்த வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) அனைத்துக்கும் ஆதரவு தெரிவித்த போது முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் சம்பந்தமாக ஒரு நிபந்தனையை வைத்து ஏன் செயற்படவில்லை.
ஏதோ ஒரு காரணத்திற்காக நல்லிணக்க அரசாங்கத்திற்கு கூட்டமைப்பினர் சோரம் போய்விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
விடுதலைப் புலிகளை அழித்து, யுத்தத்தை முடித்து வைத்தது தானே என்று, சரத்பொன்சேகா கூறிய பின்பும் 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகாவிற்கு வீடுவீடாக சென்று கூட்டமைப்பினர் வாக்குகளை சேகரித்து கொடுத்தார்கள். இதன் மூலம் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளையும், தமிழ் மக்களையும் அழித்தது சரி என்ற நிலைப்பாட்டில் தான் கூட்டமைப்பினர் இருந்துள்ளார்கள் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.
அதற்கு நன்றிக்கடனாகத் தான் ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரித்துள்ளார்கள். அதுமட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இராணுவத்தினரை விட அதிகளவு தமிழ் மக்களை கொன்று குவித்தது விடுதலைப் புலிகள் தான் என்று, அறிக்கைகளையும் வெளியிட்டு புலிகளையும் யுத்த குற்றத்திற்காக விசாரிக்க வேண்டும் எனக் கூறினார்.
இதன் மூலம் ஜெனிவாவிற்கு விடுதலைப் புலிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல், முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா நடாத்திய யுத்தம் நியாயமானது என்ற, ஒரு செய்தியையும் ஜெனிவாவிற்கு ஏற்கனவே கூட்டமைப்பினர் அறிவித்துவிட்டார்கள்.
யுத்தம் நடத்தியதும் சரியானது, தமிழ் மக்களும், விடுதலைப் புலிகளும் அழிந்ததும் மிகச்சரியானது, விடுதலைப் புலிகளைத்தான் முதலில் விசாரணை செய்ய வேண்டும் என்பதையும் ஜெனிவாவிற்கு கூட்டமைப்பினர் தெளிவுபடுத்திவிட்டார்கள். இதனை மக்கள் சரி என ஏற்றுக் கொண்டபடியால் தான் அவர்களுக்கு மீண்டும் வாக்களித்து வெற்றிபெற செய்துள்ளார்கள்.
இது ஒரு வழமையான ஜெனிவாவிற்கு வருடா வருடம் காவடி தூக்கும் நிகழ்வாக எடுத்துக் கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இவர்களால் ஜெனிவாவிற்கு போய் நீதிகேட்க முடியாது. மனித உரிமை மீறல்கள் பற்றி எவரிடமும் பேச முடியாது. ஆனால் 2014ம் ஆண்டு நான் ஜ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் விடுதலைப் புலிகள் போராளிகள், அவர்களை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் ஒரு அரசாங்கம் யுத்த மரபுகளை மீறி செயற்பட முடியாது என குறிப்பிட்டிருந்தேன்.
அவ்வாறு நான் சொன்னது தவறு என்பதால் தான் எனக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை இப்போது உணர்கிறேன். விடுதலைப் புலிகளையும் யுத்த குற்றத்திற்காக விசாரணை செய்ய வேண்டும் என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினரை வெற்றி பெற வைத்து, மக்கள் எனது தவறை சுட்டிக்காட்டி உள்ளார்கள்.
கூட்டமைப்பினர் 2004ம் ஆண்டில் அனைத்து அடிப்படை மனித உரிமை மீறல்களையும் நடாத்தி தேர்தல் ஜனநாயகத்திற்கு முற்று முழுதாக எதிராக செயற்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கி வெற்றியை பெற்றுக் கொண்டவர்கள்.
இவர்கள் எவரிடமும் இலங்கை அரசாங்கத்தின் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாட்டை எடுத்துக் கூறவும் முடியாது, தட்டிக்கேட்கவும் முடியாது. 2004ம் ஆண்டு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் இன்று வெவ்வேறு கட்சிகளில் இருந்து செயற்படுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய அமைப்பை உருவாக்கினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து செயற்பட்ட போது கிடைத்த நல்ல வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, யுத்தத்தை நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்து விட்டு, இன்று யுத்த இழப்பின் அனர்த்தங்களைப் பற்றிப்பேசி ஜெனிவா வரை எடுத்து செல்வதால் தமிழ் மக்களுக்கு எதுவிதமான நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை.
கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துக்கொண்டிருக்கும் சர்வதேச நாடுகள் இவ்வாறானவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கும் என்று நான் நம்பவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
