புகையிரதத்தில் மோதிய மாட்டை இறைச்சியாக்கி விற்பனை செய்ய முயன்ற நபர் கைது!
மன்னார் மதவாச்சி பிரதான புகையிரத வீதியில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்ததாக கூறப்படும் மாடு ஒன்றை வெட்டி இறைச்சிக்காக விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மன்னார் மதவாச்சி பிரதான வீதி மன்னார் தள்ளாடி பகுதியில் நேற்று சனிக்கிழமை (4) இரவு புகையிரதத்தில் மோதிய மாடு ஒன்றை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மீட்டு இறைச்சிக்காக குறித்த மாட்டை வெட்டி இன்று (5) காலை உயிலங்குளம் பகுதியில் விற்பனை செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இதன் போது உயிலங்குளம் பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் ஜே.றூபன் ரொனி சில்வாவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் உயிலங்குளம் பகுதிக்குச் சென்ற பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் புகையிரதத்தில் அடிபட்டு உயிரிழந்த மாட்டினை வெட்டி இறைச்சிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இறைச்சியை மீட்டுள்ளதோடு, குறித்த சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
மன்னார் நீதிமன்றத்தில் குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் (5) காலை ஆஜர்படுத்தப் பட்டதோடு, குறித்த மாட்டு இறைச்சியும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த மாட்டு இறைச்சியை அழிக்க உத்தரவிட்டதோடு, சந்தேக நபரை பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையில் குறித்த மாட்டு இறைச்சி மண்ணெண்ணை ஊற்றி அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
