அனுமதியின்றி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் கைது
மட்டக்களப்பில் இருந்து அனுமதியின்றி ஆழ்கடலில் இயந்திரப் படகுகளில் மீன்பிடிக்க சென்ற 8 பேரை நேற்று இரவு கடற்படையினர் கடலில் வைத்து கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவர்களிடமிருந்து 3 இயந்திரப்படகுகளையும் கைப்பற்றி கரைக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கடற்படையினர் வழமைபோல இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சந்தேகத்துக்கிடமாக கடலில் இயந்திரப்படகுகள் பிரயாணித்ததை அவதானித்த பின் இயந்திர படகுகளை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மட்டக்களப்பு - மாமாங்கப் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, இயந்திரப்படகுகளும் கல்லடி கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அவர்கள் மீன்பிடி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.