அஸ்வெசும உதவிகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உறுதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் அஸ்வெசும முன்னேற்ற கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அஸ்வெசும இணைப்பாளர் கே.விமலநாதன் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டமானது, இன்று(21.04.2026) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது யாழ். மாவட்டத்தின் 14 பிரதேச செயலக வாரியான முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
அஸ்வெசும செயற்றிட்டங்கள்
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், அரச செயற்றிட்டங்களை வினைத்திறனாக செயற்படுத்த வேண்டும் என்பதுடன் அஸ்வெசும உதவிகள் சரியான நபர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதுடன் பிழையான நபர்களுக்கு வழங்காதிருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், மக்களின் நலன்புரி வேலைத்திட்டமான அஸ்வெசும வேலைத்திட்டத்தை வினைத்திறனாக முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும், அஸ்வெசும பயனாளிகளுக்கு தேவையான விடயங்களை உரிய முறையில் கவனம் செலுத்தி அவர்களின் தரவுகளை துரித கதியில் இற்றைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன.
இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி.கே.லக்சிகா நலன்புரி நன்மைகள் பிரிவு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

