மட்டக்களப்பில் புதிய யு.கே பி 117 அல்பா வைரஸ் கண்டுபிடிப்பு
மட்டக்களப்பில் கோவிட் பி.சீ.ஆர் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட மாதிரி ஒன்றில் வீரியம் கூடிய திரிபுபட்ட யு.கே பி. 117 அல்பா வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண்ணுயிரியல்துறை விஷேட வைத்திய நிபுணர் பி.தேவகாந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திரிபுபடுத்தப்பட்ட வைரஸ் தொற்று தொடர்பாக நுண்ணுயிரியல்துறை விஷேட வைத்தியர் தேவகாந்தனை நேற்று தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மே மாதம் நடுப்பதியளவில் தொற்றுக்குள்ளாகிய நோயாளியின் மாதிரியை பரிசோதிக்கும் போதுதான் இந்த யு.கே பி. 117 அல்பா வைரஸ் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் எவ்வாறு மட்டக்களப்பிற்குள் வந்தது, நோயாளி எவ்வாறு தொற்றுக்குள்ளாகினார், எவ்வளவு தூரம் பரவி இருக்கின்றது என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.
இது தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரி மற்றும் பொது சுகாதார உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை திருகோணமலை, அம்பாறை, உட்பட கிழக்கு மாகாணத்தில் கோவிட் தொற்று பரிசோனைக்காக எடுக்கப்படும் மாதிரிகள் பி.சீ.ஆர் பரிசோதனைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்படும்.
அதேவேளை திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளியின் பி.சீ.ஆர் பரிசோதனை மட்டக்களப்பில் செய்யப்பட்டாலும் இந்த வீரியத்தை அறிவதற்காக இரண்டாவது மாதிரி எடுக்கப்பட்டு ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் தான் திருகோணமலையிலும் இந்த யு.கே பி. 117 அல்பா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை எழுமாறாக செய்யப்பட்ட பரிசோதனை. எங்கள் நாட்டில் பிற நாடுகளில் திரிபடைந்த வைரஸ் இருப்பதா என கண்டறிவதற்காக செய்யப்படுகின்ற பரிசோதனை.
எனவே இனிமேல்தான் இவர்களுடன் தொடர்புபட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்களா, அவர்களிடம் இந்த யு.கே பி. 117 அல்பா வைரஸ் இருக்கின்றதாக என கண்டறியவேண்டும்.
அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இந்த வைரஸ் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆனாலும் அதிஷ்டவசமாக மட்டக்களப்பில் தொற்றுக்கு உள்ளாகியிருந்த நோயாளியும் அவரது குடும்பமும் பூரணமாக குணமடைந்துள்ளார்கள்.
அதேபோல அந்த நோயாளியுடன் தொடர்புபட்டு தொற்றுக்குள்ளானவர்களும் குணமடைந்துள்ளார்கள். எனவே இந்த யு.கே பி. 117 அல்பா வைரஸால் பாதிப்பு மட்டக்களப்பிற்கு ஏற்பட்டுள்ளதா என்பதை இப்போது கூறமுடியாது.
ஆனாலும் எவ்வளவு தூரம் பரவி இருக்கின்றது அதுபரவி இருப்பதால் இறப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றதா என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.
நோயாளியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அவர் வெளிநாட்டில் இருந்து வந்துவர்களுடன் தொடர்புபட்டவரல்ல.
அவ்வாறே கொழும்பு ஏனைய பிரதேசங்களுக்கும் பயணிக்காதவர். இருந்தும் அவர் வசிக்கின்ற ஊரில் வேறு கோவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்தனர்.
அந்த தொற்றாளர்களில் இருந்து தான் இவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் மேலதிக விசாரணையின் பின்னர்தான் சரியான முடிவுகள் கிடைத்த பின்னர் முடிவு எடுக்கப்படும்.
அதேவேளை இனிவரும் காலங்களில் கோவிட் தொற்றால் இறந்தவர்களின் மாதிரி எடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என அவர்
தெரிவித்துள்ளார்.