மட்டக்களப்பு – கொம்மாதுறை தீவுப்பகுதியில் ஒருவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறையில் உள்ள தீவுப்பகுதியில் உள்ள பண்ணையின் காவலாளி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர்ப்பற்று ஒருமுலைச்சோலை கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த 53 வயதான கனகரெட்ணம் தியாகராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொம்மாதுறை தீவுப்பகுதியில் உள்ள கால்நடைப்பண்ணையில் ஒன்றில் இவர் கூலித்தொழிலாளியாக சுமார் 05 வருடமாக வேலை புரிந்துவருவதாகவும் இன்று காலை தனது வீட்டிலிருந்து வேலைக்கு வருகை தந்திருந்ததாகவும் வேலை புரியும் குறித்த இடத்தில் தகராறுகள் இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடயவியல் பொலிஸார் மற்றும் ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தினை பிரேதப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.