பசில் ராஜபக்ச நிரபராதி! தர்க்க ரீதியிலான காரணங்களை கூறுகிறார் அலி சப்ரி
பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் பெசில் ராஜபக்ச இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருந்ததை நான் பார்த்தேன். ஒரு தரப்பினர் அவரை IMF-க்கு செல்லுமாறு கூறினர் மறுதரப்பினர் IMF-க்கு செல்ல முடியாது என்று கூறினர்.
உண்மையில் பசில் ராஜபக்சவை IMF-க்கு செல்ல விடாமல் தடுத்து வைத்திருந்த ஒரு சூழ்நிலைதான் அன்றிருந்தது என்று முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இணைத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள், அன்றைய நிலையில் நிதியமைச்சராக பெசில் ராஜபக்ச பெரும் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
பெசில் ராஜபக்சவுக்கு அன்று நடந்தது என்ன
அவர் ஒரு பக்கமாக நின்று கொண்டு 'நான் போக மாட்டேன்' என்று பிடிவாதமாக இருக்கவில்லை. அவர் நடுநிலையாக இருந்தார்.
அவருக்கும் செல்ல வேண்டிய தேவை இருந்தது அதற்கான கோரிக்கையையும் அவர் விடுத்திருந்தார். ஆனால் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஆட்டிகல ஆகியோர் அதற்கு முழுமையாக எதிர்ப்ப்பு தெரிவித்தனர்.
அவர் நிதி அமைச்சர் என்பதால் அவரால் நேரடியாக முடிவெடுத்து IMF- உதவியை பெற்றிருக்க முடியும் என்று நாம் நினைக்கிறோம் அல்லவா? ஆனால், அவர் அன்று நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டது போல்தான் எனக்குத் தோன்றுகிறது.
ஏனென்றால் இவர்கள் ஒன்றைச் சொல்கிறார்கள் அவர்கள் இன்னொன்றைச் சொல்கிறார்கள். இதனால் அவரால் அதைச் செய்ய முடியாமல் போனது.
நான் நிதியமைச்சை பொறுப்பேற்பதாக இருந்தால் அந்த நேரத்தில் IMF-இடம் செல்வது மட்டும்தான் ஒரே வழி என்று கூறினேன்.
'இவர்களுடன் சேர்ந்து இதைச் செய்ய முடியாது இவர்கள் இதற்கு எதிராக இருக்கிறார்கள் என்னாலும் இவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியாது இவர்கள் விலகிக் கொண்டால் நான் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்' என்றேன்.

நான் பொறுப்பேற்கப் போகிறேன் என்று தெரிந்த உடனே கப்ரhலுடன் நான் தொடர்ந்து விவாதங்களை நடத்தினேன்.
அமைச்சரவையில் நடந்த சில விவாதங்கள் மிகவும் காரசாரமாக அமைந்தன. அதன் பிறகு அவர் பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னர் நான் இந்திரஜித் குமாரசுவாமியை அழைத்தேன்.
குமாரசுவாமி தனக்கு முடியாது என்று கூறினார். அவர்தான் நந்தலாலை அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பிறகு நந்தலாலை நாங்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து வரவழைத்தோம்.
பின்னர் சிறிவர்தனவையும் இணைத்துக் கொண்டு நாங்கள் ஒரு குழுவை உருவாக்கினோம். அவ்வாறு உருவாக்கி அந்த 45 நாட்களுக்குள் நாங்கள் ஒரு மிகப்பெரிய பணியைச் செய்தோம்.
அன்று நாங்கள் போட்ட அடித்தளத்தைத்தான் ரணில் விக்ரமசிங்கவும் முன்னோக்கி எடுத்துச் சென்றார். இந்த அரசாங்கமும் முன்னெடுத்து செல்கிறது என குறிப்பிட்டார்.