புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்கேற்பவே செயற்படுகின்ற என்.பி.பி. அரசு! கோட்டாபயவின் சகா குற்றச்சாட்டு
தனக்கு வாக்களித்த நாட்டு மக்கள் பற்றிச் சிந்திக்காது, புலம்பெயர் அமைப்புகளின் (டயஸ்போரா) தேவைக்கேற்பவே தேசிய மக்கள் சக்தி அரசு செயற்பட்டு வருகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான சுகீஸ்வர பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஜனநாயக வழியிலான கூட்டு எதிரணிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்புகள்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"பாரிய எதிர்பார்ப்புகளுடனேயே நாட்டு மக்கள் இந்த அரசுக்கு வாக்களித்தனர். ஆனால், மக்களின் அந்த எதிர்பார்ப்புகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, டயஸ்போராக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கேற்பவே அரசின் தற்போதைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

இதனால், எமது அடுத்த தலைமுறையினரின் எதிர்காலம் குறித்து எமக்கு அச்சம் நிலவுகின்றது.
மறுபுறம் இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு நாடு காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியத்திடமும் காட்டிக்கொடுப்புகள் இடம்பெற்றுள்ளன.
மக்களின் அந்த எதிர்பார்ப்புகள்
எனவே, கூட்டு எதிரணியாக இணைந்து நாம் நாட்டுக்காகப் போராடுவோம். இந்த அரசை ஆட்சியில் இருந்து விரட்டியடிப்பதற்கு எம்மால் செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். நாம் மீண்டும் ஒரு 'அரகலய' (மக்கள் எழுச்சிப் போராட்டம்) போன்ற வன்முறைகளில் ஈடுபடமாட்டோம்.

அரச கட்டடங்களைக் கைப்பற்றவோ அல்லது கொலைகளில் ஈடுபடவோ மாட்டோம். எமது போராட்டங்கள் அனைத்தும் முழுமையாக ஜனநாயக வழியிலேயே அமையும்.
இதன் முதற்கட்டமாக, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசை வலியுறுத்துகின்றோம். அந்தத் தேர்தலின் மூலம் ஒன்பது மாகாணங்களிலும் இந்த அரசை மக்கள் முன்னிலையில் மண்டியிட வைப்போம் என்றார்.