யாழ்.பொது நூலகத்திற்கு அமைச்சர் ஹினிதும சுனில் செனவி விஜயம்
பௌத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடம் மற்றும் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இன்று(23) விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது நூலகத்தின் தற்போதைய செயற்பாடுகள், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
எதிர்கால நடவடிக்கைகள்
மேலும், யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் சேவைகளை நவீனமயப்படுத்துதல், வாசகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், ஆவணங்கள் மற்றும் அரிய நூல்களைப் பாதுகாக்கும் திட்டங்கள், டிஜிட்டல் நூலக வசதிகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு எதிரே அமைந்துள்ள தொன்மை வாய்ந்த பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தைப் பார்வையிட்ட அமைச்சர் தலைமையிலான குழுவினர், அதன் புராதனத் தன்மை அழியாதவாறு அதனைப் பேணிப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்கான எதிர்காலத் திட்ட ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.

இது தொடர்பான விசேட விளக்கங்களை ஹினிதும சுனில் செனவி இதன்போது உரிய அதிகாரிகளுக்கு வழங்கினார்.
இந்தநிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ் மாநகர ஆணையாளர் அரவிந்தராஜ், யாழ்.மாநகர சபையின் பிரதி மேயர் இமானுவேல் தயாளன், யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் நிர்வாகத்தினர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

