மத்திய மலைப்பகுதியில் தொடரும் கனமழை : துண்டிக்கப்பட்டுள்ள மின்சாரம் - போக்குவரத்தும் பாதிப்பு
மத்திய மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியின் நோர்வூட் தோட்டப் பகுதியிலிருந்து பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள பாரிய மரம் ஒன்று (23) நேற்றிரவு வீதியில் விழுந்ததன் காரணமாக பல மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் சிரமம்
பிரதான வீதியில் விழுந்து கிடந்த பாரிய மரம் வெட்டி அகற்றப்பட்டதையடுத்து, அவ்வீதியின் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அப்பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால், டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மூங்கில் மரங்கள் பிரதான வீதியில் வீழ்ந்துள்ளதால் அவ்வீதியில் மிக அவதானமாக வாகனங்களை செலுத்த வேண்டும் என்று பொலிஸார் சாரதிகளிடம் எச்சரித்துள்ளனர்.
நிலவும் பலத்த காற்றினால் உயர் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதால், மஸ்கெலியா சிவனொளிபாதமலை நல்லதண்ணி பகுதியில் நேற்று (23) பிற்பகல் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொகவந்தலாவ நகரை அண்டிய தோட்டப் புறங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், நகர்ப் பகுதிகளிலும் அவ்வப்போது மின்சாரம் தடைப்படுகின்றது.
இதேவேளை, ஹட்டன், கொட்டகலை உள்ளிட்ட நகரங்களில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்ட வண்ணமே உள்ளதால் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri