சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி
சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு லயன் கழகத்தின் அனுசரணையுடனும் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
விழிப்புணர்வு ஊர்வலம்
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திலிருந்து விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமாகி மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் ஊர்வலம் சென்றது.
இதன்போது நீரிழிவு நோயின் தாக்கம் அதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் அதன் தாக்கம் தொடர்பிலான துண்டுப்பிரசுரம் ஒன்றும் விநியோகிக்கப்பட்டது.
ஊர்வலம் காந்திபூங்காவினை சென்றடைந்ததும் அங்கு நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் தொற்றா நோய் பிரிவின் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ருதேசன், மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார், லயன்ஸ் கழக மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.லோகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நீரிழிவு தொடர்பான சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








