ஆவா குழுவின் முக்கிய நபர் கைது
ஆவா குழுவின் முக்கிய நபர் என கருதப்படும் முத்து என்பவருடன் மேலும் மூன்று பேர் ஆடம்பர கார் ஒன்றில் யாழ். நல்லூர் பிரதேசத்தில் சென்றுக் கொண்டிருந்த போது இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் உட்பட ஏனைய மாகாணங்களில் உள்ள பிரதான போதைப் பொருள் விற்பனையாளர்களுடன் சந்தேக நபர்கள் தொடர்புகளை கொண்டு இயங்குவதாகவும் நபர்கள் மீதான தாக்குதல், சமூக விரோத செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய முத்து என்ற நபர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்து உட்பட நான்கு சந்தேக நபர்கள் நல்லூர் பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது யாழ். பொலிஸ் நிலையத்தின் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்ட போதே வாகனத்தில் 2.94 கிராம் ஹெரோயின், வாள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் நேற்றைய தினம் யாழ். இணுவில் பிரதேசத்தில் இரண்டு பேரை வாளால் வெட்டி படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் உட்பட கடந்த சில தினங்களில் யாழ். மாவட்டத்தில் நடந்த தாக்குதல் சம்பவங்கள், வீடுகளை சேதமாக்கிய சம்பவங்கள், சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவங்கள் உட்பட பல சமூக விரோத செயல்கள் முத்து என்பவரின் வழிக்காட்டலின் கீழ் நடந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட முத்து உள்ளிட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர், ஒரு வார காலம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
யாழ். பொலிஸார் சம்பவங்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.