வவுனியாவில் எரிவாயு பெற்று தருவதாக பணம் பறிக்க முயன்றவர் துரத்தியடிப்பு
வவுனியாவில் அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பெண் அரச ஊழியர்களிடம் எரிவாயு பெற்று தருவதாக கூறி பணம் பறிக்க முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா பணியாற்றும் பெண் அரச ஊழியர்கள் சிலருக்கு எரிவாயு பெற்றுத் தருவதாக தெரிவித்து ஐந்தாயிரம் ரூபா பணம் தருமாறு நபர் ஒருவர் கேட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த நபர் சிலரிடம் பணம் சேகரிக்க முயன்றபோது சில ஆண் அரச ஊழியருக்கு அவரின் நடவடிக்கையில், வெற்று எரிவாயுவை பெற்றுக்கொள்ளாமல் எரிவாயுவை எவ்வாறு வழங்க முடியும் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தப்பியோடிய நபர்
இதனால் அவரிடம் நீங்கள் எங்கு கடை வைத்திருக்கின்றீர்கள், எந்த எரிவாயு விநியோகஸ்தர், எங்கிருந்து எரிவாயு கொண்டு வருகின்றீர்கள் என்ற கேள்விகளை தொடுத்தபோது அங்கு கூட்டம் அதிகரிக்க முற்பட்டதை உணர்ந்த குறித்த நபர் உஷாராகி அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் எடுத்துள்ளார்.
இதன் பின்னரே குறித்த நபர் ஏமாற்றி பணம் பறிக்க முற்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. அரச உத்தியோகத்தர்கள் அவரைத் துரத்திச் சென்றபோதும் அவர் தப்பி ஓடிச் சென்றுள்ளார்.
இது குறித்து அரசாங்க அதிபரிடம் முறையிட்டு மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் அரச ஊழியர்களுக்கு எரிவாயுவை சிரமமின்றி பெற்றுக்கொடுக்க உடன் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.