அம்பாறை மாவட்டத்தின் முக்கிய தமிழ் கிராமம் கடலில் மூழ்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் பகுதியானது கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே அதனை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் அரசியல்வாதிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என அட்டப்பள்ளம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அட்டப்பள்ளம் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீண்ட பழமையான பாரம்பரியங்களைக்கொண்ட தமிழ் கிராமமமாக காணப்படுகின்ற நிலையில், அண்மைக்காலமாக அட்டப்பள்ளத்தின் கரையோரப்பகுதிகள் பாரியளவில் கடலரிப்புக்கு உள்ளாகிவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டுவந்தபோதிலும் அது பாரியளவிலான கடலரிப்பாக இல்லாத நிலையிலும், அண்மைக்காலமாகவே கடலரிப்பானது பாரியளவில் இடம்பெற்றுவருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரு மாதங்களாக பாரியளவில் கடலரிப்பு இடம்பெற்று வருவதாகவும் சுமார் 500மீற்றருக்கும் அதிகமான பகுதிகள் கடல் உள்வாங்கியுள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டவர்களின் காணிகள் கடலுக்குள் சென்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் உள்ள மக்கள் அதிகளவில் தென்னை உற்பத்தியை நோக்காக கொண்டு தென்னை தோப்புகள் காணப்படுகின்றபோதிலும் தென்னை மரங்கள் கடலுக்குள் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
யாழில் வட்டிக்கு பணம் வழங்கி கத்திமுனையில் முச்சக்கரவண்டி பறிப்பு - அதிரடி நடவடிக்கையில் தமிழ் பொறுப்பதிகாரி
அரசியல்வாதியொருவரின் பொறுப்பற்ற செயல்
குறித்த பகுதியில் இருக்கும் அரசியல்வாதியொருவர் கடலுக்குள் பாறை கற்களை கொட்டியுள்ளதன் காரணமாகவே கடலரிப்பானது மக்கள் குடியிருப்பினை சூழ அதிகளவில் நடைபெறுவதாகவும், இது தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் கொண்டுசெல்லப்பட்டபோதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கரையோர பகுதிகளிலும் வாழும் மக்கள் தினமும் உயிரை கையில் பிடித்தே வாழும் நிலைமை காணப்படுவதாகவும், இரவில் தூங்கும்போது கடல் கொண்டுசென்றுவிடுமோ என்ற அச்சத்துடனேயே இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கரையோரம் பேணல் திணைக்களம்,பிரதேச செயலகம்,பிரதேச செயலாளர்,மாவட்ட செயலகம்,ஜனாதிபதி மற்றும் உரிய அமைச்சுகளின் கவனத்திற்கு கடந்த காலத்தில் கொண்டு சென்றபோதிலும் இதுவரையில் எந்தவிதமான தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.
தனியொருவர் கடலுக்குள் கற்பாறைகளை போட்டுள்ளமை தொடர்பில் கரையோரம்பேணல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அது தொடர்பான பல்வேறு தரப்பினருக்கும் அறிவித்தல்களை வழங்கியபோதிலும் எவரும் கவனத்தில் கொள்ளவில்லையெனவும், அதேபோன்று தமது பகுதிகளிலும் கற்களை போடுவதன் மூலமே கடலரிப்பினை தடுக்கமுடியும் என நம்புவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர்
இது தொடர்பில் நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ஏ.எல்.அப்துல் லத்தீப் அவர்களுடன் தொடர்புகொண்டு கேட்டபோது,
குறித்த பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டதுடன், இது தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த பகுதிகளில் ஆறு இடங்களில் கடலரிப்பினை தடுக்க அணைகள் அமைப்பதற்கான திட்டமுன்மொழிவுகளும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், நேற்றைய தினம் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களும் அப்பகுதிக்கு விஜயம் செய்து குறித்த பகுதிகளில் கடலரிப்பினை தடுப்பதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



