முகநூல் பக்கத்தை ஊடுருவி தவறான செய்தி பதிவிட்ட நபர்! தாக்குதல் நடத்திய நபர்கள்
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முகநூல் ஊடுருவலை மேற்கொண்டு தவறான செய்திகளை பதிவிட்டதாக கூறி சந்தேக நபர் மீது தாக்குல் இடம்பெற்றதாக ஊர்காவற்துறை பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஊர்காவற்துறை பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவரின் முகநூலை ஊடுருவி அவருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சந்தேகநபர் பதிவை இட்டுள்ளார்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட இளைஞனும் அவரது நண்பர்கள் மூவரும் முகநூலை ஊடுருவியவரின் இல்லத்திற்கு சென்று இடம்பெற்ற பிரச்சினையை, முகநூலை ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் நபரின் தந்தையிடம் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து தனது மகனிடம் பிழையை எடுத்து கூறி பிரச்சினையை தீர்ப்போம் என தந்தை கூறியுள்ளார். இந்நிலையில் நால்வரும் திரும்பிச்சென்றுள்ளனர்.
மீண்டும் 30 நிமிடங்கள் கழித்து குறித்த வீட்டிற்கு வருகை தந்து குறித்த இளைஞனை வெளியில் வருமாறு அழைத்துள்ளனர்.
இந்நிலையில் இளைஞன் சூம் செயலியூடாக கற்கை நெறியொன்றை தொடர்ந்த வேளை அதை இடை நிறுத்தி வெளியில் சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த நால்வரும் முகநூலை எதற்காக ஊடுருவினாய் என்ற தர்க்கத்தில் ஈடுபட்டதோடு முகநூல் ஊடுருவியதாக சந்தேகிக்கப்படுபவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
தொடர்ந்து தாக்குதலுக்குள்ளான நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் ஊர்காவற்துறை பொலிசார் நால்வரையும் கைது செய்ததோடு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.