கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் திடீர் மரண விசாரனை அதிகாரி மீது தாக்குதல்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் வைத்து திடீர் மரண விசாரனை அதிகாரி மீது மதுபோதையில் சென்ற குழுவினரால் நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
பரந்தன் - குமரபுரம் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் ஒருவர் நோய் வாய்ப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயம் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் சடலத்தின் மாதிரி பி.சி.ஆர் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு நேற்றிரவு 7 மணியளவில் அதற்கான முடிவு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் நேற்றிரவு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்ற கிளிநொச்சி பரந்தன் பகுதியில் விருந்தினர் விடுதி ஒன்றினை நடத்திவரும் விடுதி உரிமையாளர் உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழுவினர் மதுபோதையில் சென்று தொலைபேசியில் திடீர் மரண விசாரணை அதிகாரியை அழைத்து குறித்த சடலத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது குறித்த திடீர் மரண விசாரணை அதிகாரி மீது வைத்தியசாலை வளாகத்தில் வைத்து தாக்குதல் நடத்தியதுடன், அவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில்,காயமடைந்த திடீர் மரண விசாரணை அதிகாரி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுபோதையில் சென்ற குழுவினர் இவ்வாறு தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பல்வேறு பொது அமைப்புக்களும் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.