முல்லைத்தீவில் அரச அதிகாரியை தாக்க முயற்சித்த உபதவிசாளர்: எழுந்துள்ள சர்ச்சை
முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளரை மக்கள் மத்தியில் அவதூறாக பேசி, தாக்க முயற்சித்த உப தவிசாளரின் நடவடிக்கை குறித்து உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த விடயம், கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்கள் மத்தியில் பேசுபொருளாக காணப்படுகின்றது.
அவதூறாக நடந்துக் கொண்ட அதிகாரி
இந்த நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு றிசாட்பதியூதீனின் கட்சியால் தெரிவுசெய்யப்பட்டுள்ள யோகேஸ்வரன் அனோஜன், மக்கள் பிரதிநிதி கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளராக செயற்பட்டு வருகின்றார்.
அத்துடன், கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளராக இராஜயோகினி ஜெக்குமார் கடமையாற்றி வருகின்றார்.

நேற்று(08.01.2026) குமாரபுரம் பகுதியில் பிரதேச செயலகத்தால் தற்காலிகமாக வீதி புனரமைப்பு பணி முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஒப்பந்ததாரர்களுக்கு வீதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பிரதேச சபையின் JCB இயந்திரம் அப்பகுதிக்கு அவசியம் எனக்கோரி, குறித்த உபத் தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும், இது வீதி ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறும் பணியாக இருப்பதால், கனரக இயந்திரத்தை வழங்க முடியாது என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் வேலைக்காக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுமாயின் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் பார்வையிட்ட பின்னரே இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், குறித்த வீதியினை பார்வையிடுவதற்காக பிரதேச சபையின் செயலாளர் சென்ற சமயத்தில், அந்த இடத்தில் கிராம சேவையாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர், பொதுமக்கள் என பலர் நின்ற வேளை உப தவிசாளரும் குறித்த இடத்தில் நின்று பிரதேச சபை செயலாளரை அவதூறாக பேசியதுடன் பெண் அதிகாரி என்று கூட பார்க்காமல் அடிப்பதற்கும் முயற்சி செய்துள்ளார்.
அதிகாரியை தாக்க முயற்சித்த உப தவிசாளர்
இதனையடுத்து குறித்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உப தவிசாளரின் இந்த மோசமான நடவடிக்கை தொடர்பில், உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் இவ்வாறு அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளதுடன் பெண் அதிகாரியினையும் தாக்க முற்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து அரச ஊழியர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என குற்றம் சுமத்தப்படுகின்றது.

இது தொடர்பில், வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த பிரதேச சபை உறுப்பினர், ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள குற்றச்சாட்டப்பட்ட நிலையில், இது போன்று பல்வேறு பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவராகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உப தவிசாளர் மீது தீர்க்கப்பட்ட மற்றும் தீர்க்கப்படாத வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் காணப்படுகின்ற நிலையில், இவர் ஒரு மக்கள் பிரதிநிதியாக அரச அதிகாரியினை அச்சுறுத்தும் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.