சனத் நிஷாந்தவின் சகோதரர் விளக்கமறியலில்
புத்தளம் ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் ஒருவரை தாக்கி, பொலிஸாரின் கடமைக்கு தடையேற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உட்பட மூன்று பேரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதவான் இந்திரஜித் புத்ததாச இன்று உத்தரவிட்டுள்ளார்.
ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதை உறுப்பினர் ஜகத் சமந்த, சமீர மதுசங்க மற்றும் ஏ.ஏ. தம்மி்கக ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கடந்த 18 ஆம் திகதி ஆராச்சிக்கட்டு நகரில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றுக்கு அருகில் எரிபொருளை கொள்வனவு செய்ய கலன் ஒன்றை கொண்டு வந்த நபரை தாக்கியதுடன் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் கடமைக்கு தடையேற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிகாரர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என கூறி ஜகத் சமந்த தன்னை தாக்கியதாக தாக்குதலுக்கு உள்ளான நபர் கூறியுள்ளார். ஜகத் சமந்த, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.