மது போதையில் வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குழுவினர்
மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு 5ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று மாலை தாக்குதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மது போதையில் குறித்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் வீட்டில் இருந்தவர்களை கடுமையாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இதன்போது வீட்டின் உரிமையாளரான அன்ரனி ஜோசப் (வயது 44) என்பவர் கடும் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த வீட்டில் உள்ள 18 வயதுடைய இதய நோய் உள்ள யுவதி ஒருவரையும்,15 வயதுடைய மாணவி ஒருவரையும் தாக்கியுள்ளதுடன், குறித்த இரு யுவதிகளும் தற்போது பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வீடு கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்துள்ளதுடன் நேற்று இரவு குறித்த பகுதிக்குச் சென்று பொலிஸார் நிலைமைகளை அவதானித்துள்ளதுடன் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், யாழ். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள அன்ரனி ஜோசப் (வயது 44) சுய நினைவற்ற நிலையில் உள்ளதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.