இலங்கையில் பெண்களுக்கு நேர்ந்துள்ள கொடூரம்
இலங்கையில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொலை செய்யப்பட்ட பெண்கள் தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த காலப்பகுதியில் கொலை செய்யப்பட்ட 243 பெண்களின் கொலைகளில் 128 பேரை அவர்களின் சட்டப்பூர்வமான கணவன்மாரே கொலை செய்திருக்கின்றமை தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியம் மேற்கொண்ட ஆய்வொன்றில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
விபத்துகள், தற்கொலைகள் மற்றும் பெண்கள் என்ற காரணத்துக்காகக் கொலைசெய்யப்படுதல் ஆகிய விடயப்பரப்பின் தகவல்களைத் திரட்டும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் இவ்வாறான ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதன்படி குறித்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற இயற்கைக்கு மாறான 243 மரணங்களில், 62 சதவீதமானவை குறித்த பெண்களின் சட்டபூர்வ கணவர் அல்லது முன்னாள் கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இவ்வாறான சம்பவங்களில் 69 சதவீதமானவை பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இது ஆபத்தான விடயம் என்றும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.