வடக்கில் தொடரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள்.. முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாயாறு தொடங்கி எல்லா கரையோரங்களிலும் சுருக்கு வலை, லைக்கோஸ், டைனமிக் தொழில்களையும் ஒட்டுமொத்தமாக நிறுத்தினால் எமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ளலாம் என முள்ளிவாய்க்கால் மேற்கு வளர்மதி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் சிவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் இன்றையதினம்(11.01.2026)நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழில் ஊக்குவிப்பு
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதிகளில் கரைவலை மெசின் தொடர்பான பிரச்சினை உள்ளது.
அந்த வகையில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தினை பொறுத்தவரை 9 கரைவலை மெசின்கள் தென்னிலங்கையினர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த கரைவலை மெசின் செயற்பாட்டை இலங்கை முழுவதும் நிறுத்த வேண்டும்.

முள்ளிவாய்கால் மேற்கு கிராமத்தினை பொறுத்தவரை கரைவலை செயற்பாட்டில் ஈடுபடும் மெசினை நிறுத்தாவிடில் முள்ளிவாய்க்கால் மேற்கு வளர்மதி சங்கம் சார்ந்தவர்களும், கிராம மக்களும் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.
ஆகையால் அரசாங்கம் இதற்கான ஒரு தீர்வினை வழங்கவேண்டும். கடந்த 15 வருடமாக இந்திய இழுவைமடி படகுகள் எமது கண்ணுக்கு எட்டும் தூரத்தில் மீன், இறால் முட்டையிடும் பகுதியில் மண்ணுக்கு கீழால் ஈயத்தினை இழுத்து மீன், இறாலினை கரைக்கும் கொடூரச் செயலை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய, இலங்கை அரசாங்கம் கலந்துரையாடி இந்திய இழுவை படகுகளை நிறுத்தி எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாயாறு தொடங்கி எல்லா கரையோரங்களிலும் சுருக்கு வலை, லைக்கோஸ், டைனமிக் தொழில்களையும் ஒட்டுமொத்தமாக நிறுத்தினால் எமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்த கூடியதாக இருக்கும்.
ஓய்வூதியம் வழங்க வேண்டும்
அதே போன்று, மழைக்காலம் வரும் மூன்று மாதங்களும் அயல் மாநில அச்சுறுத்தலும் இருக்கின்ற போது கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்குவார்கள்.
அப்போது அரசாங்கம் நிவாரணமும், கடற்றொழிலாளர்களுக்குரிய ஓய்வூதியத்தையும் வழங்க வேண்டும். இதனை எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாலோசித்து, வருடாந்தம் நிவாரணம் வழங்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும்.

டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலப்பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜீன் மாதம் சீனாவினால் பொருத்து வீடுகள் வழங்கப்பட்டன. அந்த பொருத்து வீடுகள் தற்போது காற்றில் பறக்கும் நிலையில் உள்ளன.
அதற்கு பொறுப்பான திணைக்களங்கள் ஆய்வுகளை செய்து அந்தந்த சங்கங்களுக்கு எஞ்சின் வலைகளை பாதுகாப்பாக வைக்ககூடிய வகையில் சரி பொருத்து வீடுகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
நீண்ட காலமாக சாலை, இரட்டைவாய்க்கால், நந்திக்கடல் சேறு எடுப்பது தொடர்பாக ஒவ்வொரு கூட்டத்திலும் பேசப்படுகிறது. நந்திக்கடல் உண்மையில் சிறந்த வளம் கொண்டது ஆனால் சேறு கூடுதலாக இருப்பதால் இறால், மீன் உற்பத்தி குறைவாக உள்ளது.
இந்த அரசாங்கம் நல்ல செயல்களை செய்யும் போது இந்த நான்கு வருட ஆட்சிக்குள் சாலை, இரட்டைவாய்க்கால், நந்திக்கடல், சிறுகடலை ஆழப்படுத்தி சேறுகளை அள்ளி எமது வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.
யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் பழுதடைந்த மற்றும் பாவனையில் உள்ள படகுகள் சமாசத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்ட படகுகளை ஏலத்தில் விடுமாறு அல்லது சங்கங்களுக்கு கையளிக்குமாறு ஒவ்வொரு கூட்டங்களிலும் கூறும் போது மீன்பிடி திணைக்களத்தினால் வழங்கப்படும் பதிவிலக்கம் தேவை என சமாசத்தினர் கூறுகின்றார்கள். இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுக்கான வழிமுறைகளை காட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.