இலங்கையிலிருந்து கடல் வழியே தமிழகம் சென்ற போலந்து நாட்டவர் கைது (Photo)
வேதாரண்யம் பகுதிக்கு அருகில் உள்ள ஆறுகாட்டு பகுதியில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் இலங்கையில் குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய குற்றத்தில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து தண்டனைக்காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
மேலும், அவர் போலந்து நாட்டை சேந்தவர் எனவும் இலங்கையில் இருந்து கடவுசீட்டு இன்றி சட்டவிரோதமான முறையில் தமிழகத்தினுள் ஊடுருவினார் எனவும் தெரியவருகின்றது.
தமிழகம் வேதாரண்யம் அருகே முனங்காடு பகுதியில் அநாதரவான நிலையில் நேற்று (24) படகொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த படகானது காற்று அடித்து பலூன் போன்று பாவிக்க கூடிய படகு ஆகும். அதில் இருவர் பயணம் செய்ய கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பொருட்கள்
அப்படகில் சுழியோடிகள் பாவிக்கும் காலணி , படகுக்கு காற்று நிரப்பும் பம் , ஜாக்கெட் , சுழியோடிகள் கடலினுள் பாவிக்கும் கண்ணாடிகள், பதினெட்டுக்கும் மேற்பட்ட தண்ணீர் போத்தல்கள், மிதக்கும் பைகள் என படகுக்கு அருகில் இருந்து சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கையில் இருந்தே இந்த படகின் மூலம் தமிழகத்தினுள் ஊடுருவி இருக்கலாம் என தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினர் சந்தேகித்துள்ளனர்.
மேலும் கடலோர பாதுகாப்பு பிரிவினர் மற்றும் க்யூ பிரிவினர் என பல்வேறுபட்ட தரப்பினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதிகளில் மோப்ப நாய்களின் உதவியுடனும் ட்ரான் கமராக்கள் மூலமும் தீவிர
கண்காணிப்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.