அவசரமாக வத்திகான் புறப்பட்டுச் சென்றுள்ள பேராயர்
கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று முன்தினம் வத்திகானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பேராயர் தனது இந்த பயணம் தொடர்பாக கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினர்களுக்கு தெரிவித்திருந்த போதிலும் பயண திகதி மற்றும் பயணத்தின் கால எல்லை தொடர்பாக அறிவிக்கவில்லை என திருச்சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வருடந்தோறும் பேராயர் வத்திகானுக்கு பயணம் மேற்கொள்ள வழக்கம் எனவும் கோவிட் தொற்று நோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் பேராயர் வத்திகானுக்கு விஜயம் செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு கட்டாயம் வத்திகானுக்கு விஜயம் செய்ய உள்ளதாக பேராயர் திருச் சபையின் குருக்களுக்கு அறிவித்திருந்தார். எனினும் பயணம் செய்ய போகும் நாள் மற்றும் பயணத்தில் கால எல்லை பற்றி எதனையும் தெரிவிக்கவில்லை.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் இந்த விபரங்களை வெளியிடவில்லை எனவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கர்தினால், வருடந்தோறும் ரோமுக்கு விஜயம் செய்து, உலகில் ஏனைய நாடுகளின் கர்தினால்களை சந்தித்து தகவல்களை பரிமாறிக்கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்துவதுண்டு.
அத்துடன் புனித பரிசுத்த பாப்பரசரையும் சந்தித்து கலந்துரையாடுவது வழக்கம். இதன் போது கத்தோலிக்க சமூகத்தினர் மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவிகள் கூட பெறப்படும் எனவும் கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த பேராயர், அவசரமாக வத்திகானுக்கு புறப்பட்டுச் சென்றமைக்கான நோக்கம் என்ன என்பது பற்றிய பல கேள்விகள் எழுந்துள்ளன.
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்நாட்டில் நியாயம் கிடைக்கவில்லை என்றால், சர்வதேச அமைப்புகள் மற்றும் கத்தோலிக்க சமூகத்தினருக்கு இந்த விடயம் குறித்து தெளிவுப்படுத்த போவதாக பேராயர் அண்மையில் கொழும்பு ஆயர் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறியிருந்தார்.
இது சம்பந்தமாக சட்டத்துறை வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக ஒரு வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam
