விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் லொஹான் ரத்வத்தேவுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
வெலிகடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு தனது நண்பர்களுடன் சென்று கைதிகள் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு்ளள ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேக்கு எதிராக விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
விசாரணை அறிக்கையை ஆராய்ந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். விசாரணை அறிக்கை குறுகிய காலத்தில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லொஹான் ரத்வத்தே சம்பந்தப்பட்ட இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் குசலா சரோஜினி வீரவர்தன தலைமையிலான 5 பேர் கொண்ட விசாரணைக்குழுவை நீதியமைச்சர் அலி சப்றி அண்மையில் நியமித்தார்.
விசாரணைக்குழுவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். லொஹான் ரத்வத்தே கடந்த 12 ஆம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்கும், கடந்த 6 ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கும் தனது நண்பர்களுடன் சென்று கைதிகளை அச்சுறுத்தியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் பகிரங்கமானதை அடுத்து லொஹான் ரத்வத்தே கடந்த 15 ஆம் திகதி சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.