அநுரகுமார உள்ளிட்ட குழுவினர் கேரளாவுக்கு விஜயம்
இந்திய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு கேரளாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் கமியூனிஸ்ட் கட்சியை முதன்மையாகக் கொண்ட இடதுசாரிக் கூட்டமைப்பால் அதிகாரம் வகிக்கப்படுகின்ற கேரளா மாநிலத்திலேயே நேற்று (09.02.2024) இக்குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தொழில்நுட்பத் துறை
மூன்று கோடியே ஐம்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட சனத்தொகையைக் கொண்ட கேரளா மாநிலம் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் வேகமான முன்னேற்றமடைந்துள்ளது.
குறிப்பாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதியுயர் இடத்தை கேரளா உரித்தாக்கிக் கொண்டுள்ளது.
இந்நிலையில், அநுரகுமார உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு கேரளா தலைநகரமான திருவனந்தபுரத்தில் மாநில அரசின் கைத்தொழில்கள் மற்றும் சட்டம் பற்றிய அமைச்சர் பி.ரஜீவ்வைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்திய விண்வெளி
அதனையடுத்து, விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் அவதானிப்புச் சுற்றுப் பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.
அந்த நிறுவனத்தின் பணிப்பாளருடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு இந்திய விண்வெளி நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் பற்றியும் தகவல்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையமானது இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் பிரதானமான விண்வெளி ஆராய்ச்சி நிலையமாக அமைவதோடு இந்தியாவின் செய்மதி நிகழ்ச்சித்திட்டத்திற்கு அவசியமான ரொக்கெட்டுகளையும் விண்வெளிக் கலங்களையும் உற்பத்தி செய்து வருகின்றது.
தொழில்நுட்ப பூங்கா
அதன் பின்னர் மேற்படி குழுவினர் இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்ற முதலாவதும் மிகப்பெரியதுமான தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் ஒன்றான திருவனந்தபுரத்தின் ரெக்னோ பாக்கிலும் (Technopark) சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பூங்கா 1990 இல் கேரளா மாநில முதலமைச்சர் ஈ. கே. நாயனாரின் ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. அது 800 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பினைக் கொண்டுள்ளதோடு கட்டடத்தின் பரப்பளவு 10.6 மில்லியன் என குறிப்பிடப்படுகின்றது.
மேலும், 480 கம்பெனிகள் அதற்குள் இயங்கி வருவதோடு 70 ஆயிரம் பேருக்கு மேற்பட்ட தொழில்வாண்மையாளர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள். இது கேரளை மாநில ஆட்சியின் கீழேயே நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |