தேர்தலை சந்திப்பதற்கு பயந்து இழுத்தடிக்கும் அநுர அரசு : சாடும் சுமந்திரன்
மாகாண சபைத் தேர்தலைச் சந்திப்பதற்கு அநுர அரசு பயப்படுகின்றது. அதனால்தான் இந்தத் தேர்தலை அநுர அரசு இழுத்தடிக்கின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பில் நேற்று(14) நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம்
மேலும் கூறுகையில், "கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் இருக்கின்றது. ஆனால், இந்த அரசு தேர்தலைச் சந்திப்பதற்குப் பயந்து கொண்டு இதனை இழுத்தடிப்பதாக எமக்குத் தோன்றுகின்றது.
இந்த அரசுக்கு ஏதோவொரு வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் நாடாளுமன்றத்தில் கிடைத்துவிட்டது.
ஜனாதிபதித் தேர்தலில் கூட அநுரகுமார திஸாநாயக்க 50 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கவில்லை. 42 சதவீத வாக்குகளைத்தான் அவர் பெற்றிருந்தார்.
முதல் தடவையாக இலங்கை வரலாற்றில் 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானவர் அவர்தான்.
அநுரகுமார ஜனாதிபதியான பிற்பாடு ஒரு அலை ஒன்று உருவானது. அதிலிருந்து ஏதோவொரு அடிப்படையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் அவர் தலைமையிலான அரசுக்குக் கிடைத்து விட்டது.
ஆனால், இந்த அரசுக்கு ஆரம்பத்தில் வாக்களித்த மக்கள் கூட இன்று தாங்கள் பிழையானவர்களைத் தெரிவு செய்து விட்டோம் என்ற ஒரு மனநிலையில் இருந்து வருகின்றார்கள்.
தேர்தலில் மக்களுக்கு முகம் கொடுப்பதற்கு
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த மக்களின் நிலைப்பாடு தெளிவாக விளங்கி இருக்கின்றது.
எங்களது கட்சியும் கூட இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எழுச்சி கண்ட நிலையில் காணப்படுகின்றது.
எனவேதான் மாகாண சபைத் தேர்தலை நடத்தி விட்டு அதில் தோல்வியடைந்து விட்டால் என்ன செய்வது என்று அநுர அரச தரப்பினர் வெட்கப்படுகின்றனர்.
அதனால்தான் என்னவோ அந்தத் தேர்தலை நடத்தாமல் இருக்கின்றனர். தேர்தலுக்குப் பயந்து தேர்தலில் மக்களுக்கு முகம் கொடுப்பதற்கு பின்வாங்கிக் கொண்டு தேர்தலைப் பிற்போடுவது ஒரு முறையற்ற செயற்பாடாகும் எனத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



