வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை(3) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று(2) மாலை கொடிச்சீலை கொண்டுசெல்லும் நிகழ்வு நடைபெற்றது.
மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றையும் ஒருங்கே கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று பாரம்பரிய கலாசார கலைஞர்களின் பவனியுடன் கொடிச்சீலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தமிழர்களின் வரலாறு
இலங்கையில் தமிழர்களின் வரலாற்றினை உலகுக்கு எடுக்காட்டும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இராம பிரான் வழிபாடுகளை மேற்கொண்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

இராமபிரானால் தண்டம் ஊன்றி உருவாக்கப்பட்ட தீர்த்தக்குளம் காணப்படுகின்றது. அதில் உயிர்நீர்த்தவர்களுக்கு பிதிர்கடன்களை நிறைவேற்றும் ஆடிஅமாவாசை தீர்த்தமாடும் தீர்த்தக்கரையாக மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்குளம் காணப்படுகின்றது.
நாளை காலை விசேட பூஜைகள் நடைபெற்று நண்பகல் 12.00மணியளவில் கொடியேற்ற நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறவுள்ளது.
பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் 11ஆம் திகதி தேர் உற்சவம் நடைபெறவுள்ளதுடன் 12ஆம் திகதி ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.







