நாட்டை திறப்பது குறித்து இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
2021, ஒக்டோபர் முதலாம் திகதிக்குப் பின்னர் நாட்டை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள் தற்போது, இறுதி செய்யப்பட்டு வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கிய பின்னர், சுகாதாரம், பொது போக்குவரத்து, விவசாயம், பொது சேவை மற்றும் தனியார் துறையை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்று ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.
அடுத்த சில நாட்களில் இது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 53 வீத மக்களுக்கு இப்போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 30 வயதுக்கு மேற்பட்ட 98 வீத மக்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தளபதி கூறியுள்ளார்.
20 முதல் 30 வயதிற்குட்பட்ட மக்கள் தொகையில் சுமார் 50 சதவிகிதத்தினர் ஒரு அளவு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.