செங்கடல் பிராந்தியத்தில் இத்தாலி போரில் ஈடுபடவில்லை..! இத்தாலி அரசு வெளியிட்ட அறிவிப்பு
செங்கடல் பிராந்தியத்தில் இத்தாலி எந்தவொரு போரிலும் ஈடுபடவில்லை என துணைப் பிரதமரும், வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சரும் அன்டோனியோ தஜானி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அந்த முக்கிய கடல் வழியில் வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற தாக்குதலில் இத்தாலியப் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததாக வெளியான செய்திகள் மற்றும் இத்தாலியுடன் தாங்கள் போரில் ஈடுபடவில்லை என்ற ஹூதி அமைப்பினரின் அறிக்கைகள் குறித்து இத்தாலிய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டள்ளார்.
சவூதி அரேபியாவில் தாக்கப்பட்ட விமானம்
சவூதி அரேபியாவிலுள்ள தாயிஃப் விமானப் படைத்தளத்தின் மீது ஹூதி அமைப்பினர் நடத்திய தாக்குதலில், தரையிறக்கப்பட்டிருந்த இத்தாலியின் F-2000 (Eurofighter) ரகப் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தேப் நீரிணை ஊடாகப் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்களை ஹூதி தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் “அஸ்பைட்ஸ்” பாதுகாப்புக் கடற்படை நடவடிக்கை உருவாக்கப்பட்டது.
இந்த நீரிணைப் பகுதியில் நிலைமை மோசமடைந்து வரும் பின்னணியில், இத்தாலி தொடர்ந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், இந்த திட்டத்தைப் புதுப்பித்து வலுப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இத்தாலியின் ஒட்டுமொத்த கடல்சார் வர்த்தகப் போக்குவரத்தில் 40 சதவீதமானவையும், ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 60 சதவீதமானவையும் செங்கடல் வழியாகவே கடந்து செல்வதால், இந்தப் பிராந்தியத்தில் தமது நாட்டிற்கு பலமான மூலோபாய நலன் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.