காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் வைத்தியர் - விசாரணையில் அம்பலமான சந்தேகநபர்களின் மோசடிகள்
தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் மூவரையும் பலத்த பாதுகாப்புடன் மேலதிக விசாரணைகளுக்கான (24) நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட நிலையில், 48 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
48 மணிநேரம் விசாரணை
சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, நுவரெலியா தலைமை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சந்தேகநபர்களை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கண்டி, தெல்தெனிய ஆதார மருத்துவமனைக்கு அருகில் கடந்த 17 ஆம் திகதி கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண் பிசியோதெரபிஸ்ட் ஒருவரின் சடலம் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டது.
இந்த மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், உயிரிழந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் முகத்தில் நகத்தால் ஏற்பட்ட சில காயங்கள் இருந்தமையும், அவர் சுயநினைவில் இருக்கும் போது கழுத்து நெறித்து கொலை செய்யும் முயற்சியை தடுக்க சந்தேகநபரின் கைகளை பிடிக்கும் போது ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், பொலிஸாரின் நீண்ட தேடுதல் வேட்டையின் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரையும் அவரது மனைவியையும் பொலிஸார் கடந்த (24) புதன் கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்தனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர் அம்பாறை மருத்துவமனையில் இயன்முறை சிகிச்சையாளராக (Physiotherapist) கடமையாற்றிய ஷம்யா தர்ஷனி (34 வயது) என்பது தெரியவந்துள்ளது.
சடலத்தை காருக்குள் வைத்துவிட்டு தப்பியோட்டம்
நுவரெலியாவில் தங்கியிருந்த விடுதியில் இரவு குறித்த பெண்ணை காதலன் என அறியப்பட்ட நபர் தூக்கி செல்லும் காட்சி சிசிடிவி காணொளிகளிலும் பதிவாகியிருந்தது. இதனையடுத்து காதலன் சடலத்தை காருக்குள் வைத்துவிட்டு தப்பிச்சென்றிருந்தார்.

இந்த நிலையில், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையணியின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் வழிகாட்டலில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.
இதற்கமைய, 7 நாட்களாக சந்தேகநபரை தேடுவதற்காக, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையின் பேரில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், சந்தேகநபர் வெள்ளவத்தை பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.
இந்த தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட யாழ்ப்பாணம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேகநபர் பயணித்த பேருந்தை சாவகச்சேரி, கைதடி பகுதியில் மறித்து, சந்தேகநபரையும் அவரது மனைவியையும் ஒரு குழந்தையுடன் கைது செய்தனர்.
மாறுவேடமிட்டு தப்பிச்செல்ல முயற்சி
சந்தேகநபர் கைது செய்யப்படும் போது தொப்பி மற்றும் முகக்கவசம், போலித்தலைமுடி (Wig) அணிந்திருந்ததுடன், அவரது மனைவி முஸ்லிம் பெண்ணை போல் மாறுவேடம் அணிந்திருந்தனர். சந்தேகநபர் அடிக்கடி பயன்படுத்தும் சில போலி தலைமுடிகளையும் அவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இந்தியாவுக்கு தப்பியோட திட்டமா?
பிரதான சந்தேகநபர் தன்னை ஒரு தமிழர் என காட்டிக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் ஒரு சில தமிழ் வார்த்தைகளையும் கற்றுக்கொண்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கும் அங்கிருந்து குருணாகல் சென்று, அங்குள்ள தமது ஏனைய இரு பிள்ளைகளையும் பார்த்த பின்னர் சரணடையவிருந்ததாக கூறினாலும், அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்லவே திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம்
தாம் உயிரிழந்த பெண் தங்கியிருந்த அறைக்குச் சென்றபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்ததாகவும், இதனால் அச்சமடைந்து சடலத்தை காரில் ஏற்றி கண்டி தெல்தெனியவுக்குக் கொண்டு சென்றதாகவும் சந்தேகநபர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், பிரேத பரிசோதனை அறிக்கைகள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும், அவரிடமிருந்து தாம் பணம் பெற்றிருந்தாலும், அது ஒன்றரை கோடி ரூபாய் அல்லவெனவும் அவர் கூறியுள்ளார்.
சந்தேகநபரின் மனைவியின் வாக்குமூலம்
தம்மால் ஏமாற்றப்படும் பெண்களுக்கு, தான் அந்த நபரின் “மூத்த சகோதரி” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, இந்த மோசடிகளுக்கு உதவி செய்ததாக மனைவி தெரிவித்துள்ளார்.
தனது மூன்று பிள்ளைகளில் இருவரை கடந்த 21 ஆம் திகதி நாரம்மலவில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு அனுப்பிவைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதேச சபை ஊழியர் உடந்தை
நுவரெலியா பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாவின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபருக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கிய குண்டசாலை பிரதேச சபை ஊழியர் ஒருவரும் (24) திகதி கைது செய்யப்பட்டார்.
16 ஆம் திகதி மாலை, பிரதான சந்தேகநபர் சடலம் இருந்த அதே காரில் குண்டசாலையில் உள்ள ஊழியரின் வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இரவு வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.
மறுநாள் சடலத்தை தெல்தெனியாவுக்கு கொண்டு செல்லும்போது, பிரதேச சபை ஊழியர் மோட்டார் சைக்கிளில் காருக்கு பின்னால் சென்றுள்ளார். சடலத்தை வைத்த பிறகு, சந்தேகநபரை மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இந்த நபர்களை மாத்தளையில் உள்ள சந்தேகநபரின் தாயின் வீட்டிற்கு அழைத்துச்செல்லவும் அவர் உதவியுள்ளார்.
சந்தேகநபர் ஊழியரின் மனைவியிடமும் 5 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக அவர் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரின் மோசடி வலை
சந்தேகநபர் 30 வயதுக்கு மேற்பட்ட, திருமணமாகாத பெண்களை இலக்கு வைத்து, திருமணம் செய்து கொள்வதாகக்கூறி ஏமாற்றும் பெரும் மோசடிக்காரர் ஆவார்.

உயிரிழந்த பிசியோதெரபிஸ்டை அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்றபோது அவர் சந்தித்துள்ளார்.
சந்தேகநபர் பெண்களை ஏமாற்றிப்பெற்ற பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார், அவர் பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் பெண்களை ஏமாற்றிப் பெற்ற மொத்தப் பணம் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
கட்டுகஸ்தோட்டை பகுதியில் ஆடை விற்பனை நிலையம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளதுடன், அங்கு பணியாற்றிய இளம் பெண்ணிடமும் 10 இலட்சம் ரூபாவை அபகரிக்க திட்டமிட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, (சிறு குழந்தையுடன்) உடந்தையாக இருந்த குண்டசாலை பிரதேச சபை ஊழியர், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைத்து தொடர்ச்சியாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



