தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு! - யாழில் அமைச்சர் தெரிவிப்பு
இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமெனில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமாகும்."
இவ்வாறு சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.
யாழ். ஆரியகுளம் நாகவிகாரையில் இன்று (23) நடைபெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர், பொசன் தினத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பில் இராஜாங்க அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "வடக்கிலுள்ள இளைஞர்கள் பலர் சிறைகளில் உள்ளனர். ஆகவே, அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது . பல்லின மக்கள் வாழும் நாட்டில் இதனை மேற்கொள்ளும்போதே இனங்களிடையே நல்லிணக்கம் ஏற்படும்" - என்றார்.