மட்டக்களப்பு பிரதேசத்தில் வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கி மீட்பு (Photos)
மட்டக்களப்பு கரடியனாறு மற்றும் சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன புல்லுமாலையில் புதைத்து வைக்கப்பட்ட வெடிமருந்துகள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடைப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் புலிபாய்ந்தகல் காடுப்பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.
சுற்றிவளைப்பு
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கோரவெளி காட்டு பகுதியில் சம்பவதினமான நேற்று (12.10.2022) மாலை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருடன் இராணுவ புலனாய்வு பிரிவினரும் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி 56 ரக துப்பாக்கி ஒன்றையும் 8 ரவைகளையும் மீட்டுள்ளனர்.
வெடிமருந்துகள்
இதேவேளை கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன புல்லுமலை வயல்பகுதியில் உழவு இயந்திரத்தால் வயலை உழுதபோது பெரல் ஒன்றின் மூடி வெளியே வந்துள்ளது.
தொடர்ச்சியாக நிலத்தை தோண்டியபோது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட பரல் ஒன்றில் வெடிபொருட்கள் இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் பரலில் இருந்து பொலித்தீனால் சுற்றப்பட்ட பெருமளவிலான வெடி மருந்துக்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியானது விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி
என்பதுடன் நீதிமன்ற உத்தரவினை பெற்று மீட்கப்பட்ட வெடி மருந்துகளை செயலிழக்க செய்வதற்கு
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.