இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் காரணத்தை விளக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீதான குற்றச்சாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்கவில்லை என்று அறிவித்தமைக்கான காரணத்தை இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் விளக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.
2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவின் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை தொடரப் போவதில்லை என்று, இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று நீதிமன்றங்களுக்கு அறிவித்தது.
இந்த நிலையில் சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய - பசிபிக் பணிப்பாளர் யாமினி மிஸ்ரா இந்த முடிவு குறித்து விளக்கம் கோரியுள்ளார்.
உலகில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கட்டாய காணாமல் போனோர் என்ற இடத்தில் இலங்கை உள்ளது.
இந்த வழக்கு, சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கான வாய்ப்பை இலங்கை அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தது.
எனினும் தற்போதைய முடிவு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதற்கான வாய்ப்பை தள்ளிச் சென்றுள்ளது.
எனவே இலங்கை சட்டமா அதிபர், தமது முடிவுக்கான காரணங்களை விளக்க வேண்டும், மேலும் இலங்கை அதிகாரிகள் கட்டாய காணாமல் போன அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று யாமினி மிஸ்ரா கோரியுள்ளார்.
கடற்படை 11 வழக்கு 2008 - 2009இல் 11 சிறுபான்மை இளைஞர்கள் கட்டாயமாக காணாமல் போனதை குறிக்கிறது. இது இலங்கை கடற்படை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடற்படையின் சிரேஷ்ட தளபதிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் 2018, ஆகஸ்டில், குற்றவியல் புலனாய்வுத் துறை முக்கிய சந்தேகநபராக நேவி சம்பத் என்ற லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை கைது செய்தது.
இதனையடுத்து அவரை பாதுகாத்தார் என்ற என்ற குற்றச்சாட்டு, அப்போதைய கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது சுமத்தப்பட்டது. மேலும் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
2019 பெப்ரவரியில், இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, இந்த வழக்கில் 14 வது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டார்.
அவர் கடற்படையினரால் 11 பேர் கட்டாயமாக காணாமல் போகச் செய்யப்பட்டமை பற்றி அறிந்திருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.
எனினும் அவர் அதனை மறுத்திருந்தார். இந்த நிலையிலேயே இலங்கையின் சட்டமா அதிபர், கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தொடரப் போவதில்லை என்று நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.