இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள்: அமலராஜ் அமலநாயகி விசேட அழைப்பு
இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தை கரிநாளாக நினைத்து எமது எதிர்ப்பினை தெரிவிக்க முன்வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அமலராஜ் அமலநாயகி வேண்டுகோள் விடுத்தார்.
எதிர்வரும் இலங்கையின் சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக நேற்று(28.01.2026) இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டமானது, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில்சமூக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், மத தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்,ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
16 வருடங்களாக கிடைக்காத நீதி
இந்த விடயம் தொடர்பில் அமலராஜ் அமலநாயகி மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்படுவது சுதந்திர நாள் என்று ஆனால் அது தமிழர்களாகிய எங்களுக்கு ஒரு கரிநாள்.

எத்தனையோ ஆட்சிகள் மாறி வந்தாலும் தமிழர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை. 90ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து தங்களது உறவுகளை தொலைத்து விட்டு ஒவ்வொரு ஆட்சியாளர்களும் வந்து செல்வார்களே தவிர தாய்மாருக்கான எந்தவொரு நீதியும் இதுவரை கிடைக்கவில்லை.
கடந்த 16 வருடங்களாக எனது கணவரை கூட நான் தேடிக் கொண்டு இருக்கின்றேன் 16 வருடங்களாக ஒவ்வொரு ஆட்சியாளர்களும் அதனை செய்வோம், இதனை செய்வோம் என்று கூறுகின்றார்கள். ஆனால் உண்மையில் இந்த காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சனைக்கு இந்த புதிய அரசு கூட எந்த விதத்திலும் கவனம் செலுத்தவில்லை.
தற்போதைய ஜனாதிபதி தேர்தல் காலங்களில் பல்வேறு வாக்குறுதிகளை தெளித்து, இந்த ஆட்சிக்கு வந்திருந்தார். சுமூகமான ஒரு அரசியலாக பார்க்கின்றாரே தவிர எங்களுக்கான பிரச்சனைகளுக்கான எந்தவொரு தீர்வு திட்டங்களும் இதுவரை இடம்பெறவில்லை.
அந்த வகையில், காணாமல் ஆக்கப்பட்ட விடயம் கூட அப்படி தான் போடப்பட்டிருக்கின்றது. நீதி கிடைக்கப் பெறாத சமூகமாக மக்களாக 350-க்கும் மேற்பட்ட தாய்மார்களின் பிள்ளைகளை தேடி இறந்தவர்களாக இருக்கின்றார்கள். இந்த சாட்சியங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
புதிய சட்டங்கள்
அதேபோன்று, தமிழர்களது அனைத்து உரிமைகளும் முடக்கப்படுகின்றது. புதிய சட்டங்களை கொண்டு வந்து எங்களது குரலை நசுக்கிக்கின்றார்கள். தனது மண்ணில் தான் ஆளக்கூடிய நிலைமை இல்லாதவொரு சூழ்நிலையை ஒவ்வொரு சிங்கள அரசியல் சட்டங்களில் கூடாகவும் எங்களை ஒரு அடக்குமுறைக்குள் கொண்டு வருகின்றார்கள்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் போராட்டம் தொடர்பாக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று அழைப்புகளை விடுத்து வருகின்றார்கள்.
அதே நேரத்தில், இந்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் அனைத்து பொதுமக்களும் சிவில் அமைப்புகளும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் உரத்த ஒரு குரல் கொடுக்க வேண்டும்.
விசேட அழைப்பு
எதிர்வரும் 4ஆம் திகதி இந்த போராட்டத்திற்கு பெரிய ஒரு செய்தியை இதுவரை இந்த அரசு ஒன்றரை வருடங்கள் கடந்து எங்களுக்கான நில பிரச்சினைகளாக இருக்கட்டும் காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சினையாக இருக்கட்டும் தொல்பொருள் என்கின்ற போர்வையில் பதாகைகளை இட்டு அரச காணிகளாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
எங்களுடைய நிலத்தில் நாங்கள் வாழ்வதற்கான உரிமை இல்லை எமது நிலத்தை தா என்று கேட்டாலும் அதற்கும் பொலிஸாரை குவித்து எங்களை அடக்கி ஒடுக்குகிறார்கள் தவிர இவ்வாறான நாட்டில் எமக்கு எங்கு சுதந்திரம்.

இந்த சுதந்திரம் இல்லாததால் தான் நாங்கள் கரிநாளாக எதிர்வரும் 4ஆம் திகதி நாங்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க இருக்கின்றோம்.
அனைத்து பொதுமக்களும் சிவில் அமைப்புகள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர், யுவதிகள் என அனைவரின் பங்களிப்பு அவசியம்.
அத்துடன், தேசியம் சார்ந்த அரசியல் தலைவர்கள் பொது அமைப்புகள் அனைவரும் இதில் உரத்த தொனியில் அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை சொல்ல வேண்டும்.
மேலும், போக்குவரத்து சபை, வர்த்தக சங்கம், ஆட்டோ சங்கம், கடற்றொழிலாளர்கள் சங்கங்கள் என அனைவரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.