நாம் இறப்பது ஒரு வரலாறாக இருக்க வேண்டும் :ஏ.ஏ.நவரெட்னம் அடிகளார்(Photos)
இந்த உலகத்தின் நாம் பிறப்பது ஒரு சம்பவமாகவிருந்தாலும் நாம் இறப்பது ஒரு வரலாறாகவிருக்கவேண்டும் எனக் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அருட்தந்தை ஏ.ஏ.நவரெட்னம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கலாவித்தகர் ஸ்ரீமதி வசந்தி நேருவின் நிருத்திய கலாலய நாட்டியப்பள்ளியின் கின்னஸ் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது. மட்டக்களப்பு.கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிருவகத்தின் இராசதுரை அரங்கில் கலாவித்தகர் ஸ்ரீமதி வசந்தி நேருவின் தலைமையில் நடைபெற்றது.
2021ஆண்டு மதுரையைச் சேர்ந்த நாட்டிய கலாமணி முரளிதரனால் நடாத்தப்பட்ட நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் ஊடாக சுமார் 700மாணவர்கள் கலந்துகொண்ட தமிழ் வர்ணம் நாட்டிய நிகழ்வு நடாத்தப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
இந்த கின்னஸ் சாதனை நாட்டிய நிகழ்வில் நிருத்திய கலாலய நாட்டியப்பள்ளியின் 16மாணவிகள் கலந்து கொண்டு சாதனைக்குச் சொந்தக்காரர்களாகினர்.
இந்த நிகழ்வில் அதிதிகளாகச் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஓய்வு நிலை அதிபர் திருமதி கலாரட்னா ஆர்.தட்சணாமூர்த்தி,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன்,கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட ஓய்வுநிலை பேராசிரியர் எம்.செல்வராஜா உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கலைத்துறைக்கு பாரிய பங்களிப்பினை வழங்கிவரும் நடனத்துறை விரிவுரையாளர்கள்,ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் கின்னஸ் சாதனை படைத்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வின்போது நிருத்திய கலாலய நாட்டியப்பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை
நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.