சீன கப்பலை அனுமதித்தது கடினமான முடிவு - ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜப்பானுடன் இலங்கை முதலில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என்றும் அதற்கான பின்னணியை தனது ஜப்பான் விஜயத்தின் போது ஒழுங்கு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஆரம்ப கட்ட விவாதங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் கூறினார்.
கப்பலை அனுமதித்தது கடினமான முடிவு
மேலும், சீனாவுடனான பேச்சுவார்த்தையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும், பேச்சுவார்த்தை நடத்தும் திகதி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார வீழ்ச்சி மற்றும் கடன் செலுத்துவத தவறியமை காரணமாக கடன் மறுசீரமைப்பு குறித்து இம்முறை முதன்மைக் கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சீன ஆய்வுக் கப்பலின் இலங்கைப் பயணம் தொடர்பான கலந்துரையாடலை நடத்திய மூத்த இந்திய ஊடகவியலாளர் நிதின் கோக்லேயின் கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஆய்வுக் கப்பலை அனுமதித்தது கடினமான முடிவு எனத் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், அதனை மாற்றியமைப்பதற்கான நியாயமான காரணத்தை அரசாங்கம் காணவில்லை எனவும் அவர் இந்த கலந்துரையாடலில் தெரிவித்தார்.
இந்த கப்பல் இலங்கைக்கு செல்வதற்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து, ஆய்வுக் கப்பலின் பயணத்தை ஒத்திவைக்க இலங்கை அரசு முடிவு செய்தது.
எவ்வாறாயினும், அந்த தீர்மானம் தொடர்பில் சீன அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளியிட்டதுடன், அவ்வாறான சந்தர்ப்பத்தில் இரு ஆசிய நாடுகளாலும் தாக்கப்படும் நாடாக இலங்கை மாறியதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.