இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்தது சீன கப்பல்
யுவான் வேங் – 5 (Yuan Wang 5) என்ற சீன அதி தொழில்நுட்ப ஆய்வு கப்பல், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த கப்பல் இன்று காலை 7.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என கூறப்படுகின்றது இன்று முதல் 07 நாட்களுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் குறித்த கப்பல் நங்கூரமிடப்படவுள்ளது.
குறித்த கப்பல் வருவதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்த போதிலும், கப்பலின் வருகையை தாமதிக்குமாறும் இலங்கை அதிகாரிகள் சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதேவேளை, கடந்த 12ம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான பி.என்.எஸ்.தைமூர் (PNS Taimur) கப்பல் வெற்றிகரமான கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
கடற்படையினரின் மரபிற்கமைய தைமூர் கப்பலுக்கான பிரியாவிடை, கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.
தைமூர் கப்பல் இலங்கையிலிருந்து வெளியேறும் போது, கொழும்பு துறைமுகத்திற்கு அப்பாலுள்ள கடற்கரையில் இலங்கை கடற்படையின் சிதுரல கப்பலுடன் தேடுதல், மீட்பு பயிற்சிகள் அடங்கிய கூட்டு நட்பு கடற்படை பயிற்சியும் இடம்பெற்றது.