மக்கள் பிரதிநிதிகளை அழைக்காதது ஏன்..! அநுர அரசாங்கத்தின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு
மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு ஏனைய மக்கள் பிரதிநிதிகளை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அழைப்பதில்லை என புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் தெரிவித்துள்ளார்.
இன்று (03.10.2025) விசுவமடு கிழக்கு பகுதியில் உள்ள அட்டைக்குளம் அபிவிருத்திக்கு இரண்டு மில்லியன் ரூபா பணத்திட்டத்தினை அரசாங்கம் மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஓதுக்கீடு செய்துள்ளது அதற்கான முன்னாயத்த திட்டமிடல் கலந்துரையாடல் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இன்று இரவு வரை அவதானமாக இருங்கள்..! வவுனியா - முல்லைத்தீவு உட்பட்ட சில மாவட்டங்களுக்கு அவசர அறிவிப்பு
பிரதேசங்களில் நடக்கின்ற அபிவிருத்திக்கு
மேலும் தெரிவிக்கையில், இன்றைய இந்த கூட்டம் தொடர்பில் தவிசாளர் என்றவகையில் எந்த அழைப்பும் எனக்கு கிடைக்கவில்லை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரனுக்கும் கிடைக்கவில்லை.
இந்த நாட்டில் ஊழல் இல்லாத அரசாங்கம் என்று சொல்லிக் கொண்டுவரும் அரசாங்கம் எடுக்கின்ற நல்ல திட்டங்களுக்கு நாங்கள் ஆதரவாக நிற்கின்றோம்..
ஏன் இவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் நடக்கும் போது மக்கள் பிரதிநிதிகளை அழைப்பதில்லை. தேசிய மக்கள் சக்கதியின் கட்சி சார்ந்தவர்களையே அழைத்து நிற்கின்றார்கள்.
ஒவ்வொரு பிரதேசங்களில் நடக்கின்ற அபிவிருத்திக்கு பிரதேசங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கவேண்டும் அந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். இனிவரும் காலங்களிலாவது இந்த அரசாங்கம் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
நூற்றுக்கணக்கான வேலைத்திட்டங்கள்
தவிசாளரின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அங்கு பிரசன்னமாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், வன்னி மாவட்டத்தில் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.
அதேபோல் பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் இருக்கின்றார்கள். அனைவரும் பல்வேறுபட்ட வேலைப்பழுவிற்கு மத்தியில் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
வன்னியில் கிராம மட்டங்களில் நூற்றுக்கணக்கான வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன. இந்த நிகழ்வுகள் அனைத்திலும் அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொள்வதாக இருந்தால் அவர்கள் அது மட்டும்தான் செய்யலாம்.
இன்றைய நிகழ்விற்கு நான் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரின் பணிப்பின் பெயரில் வந்தேன். அட்டைக்குளம் அபிவிருத்தி தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியல் பிரசாரமோ அல்லது அரசியல் வியாபாரமோ இங்கு இடம்பெறவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் து.ரவிகரன் எம்பிக்கும் எங்ளை நன்கு தெரியும் நாங்கள் அவர்களுடன் சேர்ந்துதான் இயங்குகின்றோம் அதேபோல்தான் எங்களுடன் இணைந்துதான் அவரும் இயங்குகின்றார்.
இதில் எந்தவித பாராபட்சமும் இல்லை. மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில் மற்றும் பாரிய வேலைத்திட்டங்கள் நடைபெறும் பொழுது அவர்களை அழைக்கின்றோம். முன்னுரிமை வழங்குகின்றோம்.
நானும் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் பிரதிநிதி என்ற வகையிலேயே இந்த நிகழ்வின் கலந்து கொண்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








