சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்..! அரசியல்வாதிகள் தனியார் ஹோட்டலில் இரகசிய சந்திப்பு
கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் எதிர்க்கட்சி அரசியல் கட்சித் தலைவர்களின் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளதுடன், இரவு உணவும் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தனவின் அழைப்பின் பேரில் 25க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள்
இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்த தங்கள் நிலைப்பாட்டை கூட்டத்தில் விளக்கியுள்ளனர்.
எதிர்க்கட்சியின் தலைமையில் கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துவது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
மேலும், எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து எடுக்க வேண்டிய பல முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு முன்வைக்கப்பட்ட அனைத்து திட்டங்களுடனும் உடன்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



