ஹட்டன் நகர சபை ஒன்றும் செய்யவில்லை..! எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று(24.04.2026) நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் காலை 10.45 மணியளவில் ஆரம்பமானது.
எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆட்சேபனைகளால் அமர்வை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.
சபை செயல்படத் தொடங்கி பத்து மாதங்கள் கடந்துள்ள போதிலும், எந்தவித அபிவிருத்தியும் நடைபெறவில்லை என்றும், நிர்வாகம் மிகவும் மோசமாக உள்ளது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதுப்பிக்கப்படாத நிர்வாகம்
இங்கு உரையாற்றிய இ.தொ.கா உறுப்பினரும் உபதலைவருமான சுரேன்,
கடந்த சபை அறிக்கையில் பல தவறுகள் உள்ளதாகவும், உறுப்பினர்களின் உரைகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். திருமணம் ஆகாத நாடாளுமன்ற உறுப்பினரை “திருமதி” என குறிப்பிடப்பட்டிருப்பது போன்ற பிழைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் அவர் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணி உறுப்பினர் லோகேஷ்வரன் உரையாற்றுகையில், கடந்த பத்து மாதங்களில் நகரசபைக்கு எந்தவித கொள்வனவுகளும் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும், சபை மண்டபத்தில் இருக்கும் நாட்காட்டி கூட புதுப்பிக்கப்படாதது நிர்வாக குறைபாட்டிற்கான எடுத்துக்காட்டு என குறிப்பிட்டார். உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்கள் வழங்கப்படவில்லை என்றும், அதிகாரிகள் மௌனம் காக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் தலைவரும் தொழிலாளர் தேசிய சங்க உறுப்பினருமான டாக்டர் அழகமுத்து நந்தகுமார், நகரசபையின் அடிப்படை வசதிகளே மோசமாக உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
சுகாதார வசதிகள் குறைவாக உள்ளதுடன், பொது சுகாதார பரிசோதகர்கள் இல்லாத நிலைமை நகர சுத்தத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சில சுத்திகரிப்பு பணியாளர்கள் பொதுமக்களிடம் பணம் கோருவதாகவும் குற்றம் சாட்டினார். இ.தொ.கா உறுப்பினர் எஸ். பிரபாகரன் உரையாற்றுகையில்,
கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து திட்டமிடல் குழு கூடவில்லை என்றும், சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
வங்கிக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள்
நகரசபை அனுமதி இல்லாததால் மக்களுக்கு வங்கிக் கடன் பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த நகரசபைத் தலைவர், கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனால் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனினும், உறுப்பினர்கள் தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்த நிலையில், அமர்வு குழப்பத்துக்குள்ளானது. இதனால், நகரசபை அமர்வு எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam