மூன்று கட்சிகளும் இணைந்து எமக்கு தீர்வினை பெற்று தர வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது: கலாரஞ்சினி
மூன்று கட்சிகளும் கடந்த காலங்களை போன்றல்லாது ஒன்றாக இணைந்து எமக்கு தீர்வினை பெற்று தர வந்துள்ளமை மகிழ்ச்சியாக உள்ளது என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், மத குருமார் என அனைவரும் சேர்ந்து இம்முறை மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு கால நீடிப்பை வழங்கக்கூடாது என அனைவரும் ஒன்றிணைந்து நீதி கிடைக்க வேண்டும் என ஒரு கோரிக்கையை முன்வைக்க உள்ளோம்.
முன்னைய காலகட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்புக்கள் வழங்கப்பட்டன. அவர்கள் கால நீடிப்பை பெற்று கொண்டதற்கான விடயங்களை நிறைவேற்றவில்லை.
எனவே இம்முறை இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, அதன் ஊடாக ஒரு தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.
முன்னைய காலங்களை போன்று அல்லாது மூன்று கட்சிகளும் ஒன்றாக இணைந்து எமக்கு தீர்வினை பெற்று தர வந்துள்ளமை மகிழ்ச்சியாக உள்ளது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் எமது கோரிக்கைக்கு அமைவாகவும் பாதிக்கப்பட்ட எமக்கு நீதி கிடைக்கவும் சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து இலங்கை விடயம் தொடர்பில் நீதியான பொறிமுறை ஒன்றை உருவாக்கி நீதியை பெற்று தரும் என நம்புவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.