கமேனிக்காக திரண்ட மில்லியன் கணக்கான மக்கள்! ஸ்தம்பித்தது தெஹ்ரான் - ட்ரம்பிற்கு எதிராக ஆக்ரோஷ முழக்கம்
ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வல சடங்குகளில் பங்கேற்பதற்காக, தலைநகர் தெஹ்ரானின் வீதிகளில் மில்லியன் கணக்கான மக்கள் திரண்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் 'தஸ்னிம்' செய்தி முகமை மற்றும் 'பிரஸ் டிவி' ஆகிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, நாட்டின் நவீன வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கான மிகப்பெரிய பொதுமக்களின் கூட்டமாக இந்த இறுதி ஊர்வலம் அமைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் விவரித்துள்ளனர்.
ஸ்தம்பித்துள்ள தெஹ்ரான் நகரம்
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் நடந்த இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட கமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், அவருக்கு இறுதி விடை கொடுக்கவும் நாடெங்கிலும் இருந்து வந்த இலட்சக்கணக்கான மக்கள் கண்ணீருடன் தலைநகரில் திரண்டதால் தெஹ்ரான் நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.

இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ஈரானிய மக்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவப்படம் அடங்கிய விளம்பரப் பலகையின் மீது கற்களை வீசி எறிந்ததோடு, தங்களது தந்தையைக் கொன்ற அமெரிக்காவையும் ட்ரம்பையும் சும்மா விடமாட்டோம் என்று கூறி பழிவாங்கக் கோரி தீவிர முழக்கங்களை எழுப்பினர்.
அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அவரது மகன் மொஜ்தபா கமேனி, இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த இறுதி ஊர்வலத்தில் பொதுவெளியில் தோன்றவில்லை.
அமெரிக்கா - இஸ்ரேல் உடனான போர் தற்காலிக அமைதி ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்துள்ள போதிலும், இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகளால் இரு நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை மேலும் ஒரு வாரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.