அக்குரேகொட இரட்டைக்கொலை விசாரணைகள் தொடர்பில் வெளியான தகவல்
அக்குரேகொடவில் கடந்த 13 ஆம் திகதி சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
12 பொலிஸ் குழுக்கள் விசாரணை
2026 பெப்ரவரி 13 ஆம் திகதி பதிவான இந்த இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பில், மூன்று நாட்களுக்குள் பிரதான துப்பாக்கிதாரி உட்பட ஐவர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூவர் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், ஏனைய சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் சில சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக 12 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், வரும் நாட்களில் மேலதிக முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்கள் மற்றும் ஏனைய தொடர்புகள் குறித்து விசாரணை
இந்த கொலைத்திட்டம் கரந்தெனிய சுத்தாவில் வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டிருந்தது.
அத்துடன், கொலை இடம்பெற்ற நாளன்று கரந்தெனிய சுத்தா இவருக்குப் பலமுறை தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தியுள்ளமை தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ஏனைய தொடர்புகள் குறித்து பொலிஸ் விசேட குழுவொன்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.