அஜித் மானப்பெரும நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
ரஞ்சனின் வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் மானப்பெரும சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அஜித் மான்னப்பெருமவின் பெயரை வர்த்தமானியில் வெளியிட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.
அஜித் மான்னப்பெரும கடந்த தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 47212 விருப்பு வாக்குகளை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, கடந்த ஜனவரி மாதம், 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, கடந்த 3 மாதங்களாக நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள முடியாத நிலையைத் தொடர்ந்து, அவரது எம்.பி பதவி இவ்வாறு செயலற்று போவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த ஆசன வெற்றிடத்திற்காக அஜித் மானப்பெரும இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.